மதகஜராஜா படத்தின், பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, கை நடுங்கிய விஷால் குறித்து, யூடியூப் சேனல்களில் அவதூறான கருத்துக்களை பரப்புபவர்கள் மீது புகார் அளித்த ஏன் என்பது குறித்து நடிகர் விஷால் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு தயாரான படம் மதகஜராஜா. 2013-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருந்த இந்த படம், பொருளாதார நெருக்கடி காரணமாக 12 வருடங்கள் கழித்து கடந்த பொங்கல் தினத்தில் வெளியானது. 12 ஆண்டுகள் தாமதம் ஆனாலும், படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு முக்கிய காரணமாக நடிகர் சந்தானம் தான்.
இதனிடையே மதகஜராஜா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது பேசிய விஷால் கை நடுக்கத்துடன் காணப்பட்டார். அப்போது அவருக்கு வைரஸ் காய்ச்சல் என்று சொல்லப்பட்டாலும், விஷாலுக்கு என்ன ஆனாது என்றும், அவருக்கு தவறான பழக்கங்கள் இருக்கிறது என்றும் இணையதளங்களில் செய்திகள் வெளியாக தொடங்கியது. நடிகர் சங்கத்தின் முக்கிய பொருப்பில் இருக்கும் விஷால் குறித்து இப்படி அவதூறான கருத்துக்கள் பரவியது குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த விஷால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நான்கு நிமிட வீடியோவால் உலகத்தில் எங்கெல்லாம் என்னை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு பத்திரிக்கையாளர்கள் காட்டிவிட்டார்கள். அதற்கு நான் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்னைப் பற்றி மட்டுமல்லால் சில நடிகர், நடிகைகள் பற்றியும் சிலர் யூடியூப் சேனல்களில் அவதூறு பரப்பி வருகிறார்கள். அதற்கு கடிவாளம் போட வேண்டும் என்று நாங்கள் அதற்கான ஒரு முயற்சிகளை எடுத்து இருக்கிறோம்.
நடிகர்கள் நடிக்கும் படங்கள் பற்றி உங்களுடைய கருத்துக்களை தாராளமாக பேசுங்கள். ஆனால் நடிகர்களின் குடும்ப விஷயங்கள், அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்கள் பற்றி அவதூறு பரப்பாதீர்கள். அது எல்லோருக்கும் நல்லது கிடையாது. அப்படி பரப்புபவர்கள் முதலில் அவர்களுடைய வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள். அவதூறு பேசுபவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அடுத்தவர்களை பற்றி துளி கூட வருத்தம் இல்லாமல் கண்டதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு டாக்டர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நபர் என்னுடைய உடல் நிலையை குறித்து என்னென்னமோ பேசினார் அவர் டாக்டரா கமெண்ட்ரா என்று கூட எனக்கு தெரியாது. அவர் மூன்று மாதத்தில் என் நிலைமை அவ்வளவு தான், இனி என்னால் எழுந்து நடக்கக்கூட முடியாது என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். நான் இப்போது மீண்டும் வந்து விட்டேன். இதற்கு அவர் என்ன பதில் சொல்வார் என்று விஷால் பேசியுள்ளார்.