பிரபல காமெடி நடிகர் யோகிபாபு கார் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து யோகி பாபு விளக்கம் அளித்துள்ளார்.
சின்னத்திரையில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, அமீர் நடிப்பில் வெளியான யோகி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் யோகி பாபு. ஆரம்பத்தில் சிறுசிறு கேரக்டர்களில் நடித்து வந்த இவர், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக மாறிய இவர், பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இடையில் ஒரு சில படங்களில் காமெடி ஹீரோவாக நடித்த யோகி பாபு, ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியிலும் கலக்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் யோகி பாபு, பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், இன்று அதிகாலை அவர் கார் விபத்தில் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியானது. சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும்போது, வாலஜபாத் அருகே விபத்து நடந்ததாக கூறப்பட்டது.
இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பாக பரவி வரும் தகவல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் யோகி பாபு, தனது எக்ஸ் பக்கத்தில் தான் விபத்தில் சிக்கியதாக வெளியான செய்தி குறித்த புகைப்படத்தை பதிவிட்டு, நான் நலமுடன் இருக்கிறேன் இது தவறான தகவல் என்று விளக்கம் அளித்துள்ளார். யோகி பாபுவின் இந்த விளக்கம் தொடர்பான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.