'96' என்ற உணர்வுப்பூர்வமான காதல் காவியத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் பிரேம்குமார். இவர் சமீபத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான 'மெய்யழகன்' திரைப்படத்தையும் இயக்கி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.
உறவுகளை மையமாக வைத்து உணவுகளை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. தற்போது '96' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க பிரேம்குமார் தயாராகி வரும் நிலையில், நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இயக்குனர் பிரேம்குமாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், செய்துள்ள ஒரு செயல் பலரது மனதையும் தொட்டுள்ளது.
பிரேம்குமாருக்கு வெள்ளை நிற மஹிந்திரா தார், குறிப்பாக தார் ரோக்ஸ் (Thar Roxx AX5L 4x4) ரக கார் மீது நீண்ட காலமாக ஒரு ஆசை இருந்து வந்துள்ளது. ஆனால், வாழ்க்கையின் பல்வேறு தேவைகள் மற்றும் மாறிய முன்னுரிமைகள் காரணமாக, அதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை அவர் வேறு விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டியதாயிற்று. இதனால், அவரது அந்த நீண்ட நாள் கனவு கொஞ்சம் கொஞ்சமாக எட்டாக்கனியாக மாறியது.
இந்நிலையில், சூர்யா அனுப்பிய ஒரு செய்தி அந்த கனவுக்கு மீண்டும் உயிர் கொடுத்தது. பிரேம்குமார் எப்போதோ விரும்பியிருந்த அதே காரின் புகைப்படத்தை சூர்யா அவருக்கு அனுப்பி, "வந்துவிட்டது" என்று ஒரு எளிய ஆனால் வலிமையான செய்தியை அனுப்பினார். உண்மையான ஆச்சரியம் பிரேம்குமாருக்காக சூர்யாவின் இல்லமான லட்சுமி இல்லத்தில் காத்திருந்தது. அவர் அங்கு சென்றதும், அந்த பளபளப்பான வெள்ளை நிற தார் கார் கம்பீரமாக நிற்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
அதற்கு அருகில் கார்த்தி நின்று கொண்டிருந்தார். அவர் பிரேம்குமாரின் கையில் காரின் சாவியை கொடுக்க, அந்த இயக்குனர் ஒரு கணம் திகைத்து நின்றார். அந்த சகோதரர்கள் அவருக்கு ஒரு பரிசை மட்டுமல்ல, அவரது நீண்ட நாள் ஆசையையும் நிறைவேற்றியிருந்தனர். அந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தில் பிரேம்குமாவுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை.
இந்த நெகிழ்ச்சியான அனுபவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிரேம்குமார், இதனை வெறும் பரிசாக பார்க்கவில்லை, தனது இரண்டு மூத்த சகோதரர்கள் நிறைவேற்றிய கனவாக பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட அவர், கார் கிடைத்த இரண்டு நாட்களில் 50 கிலோமீட்டர் வரை ஓட்டிவிட்டதாகவும், அந்த நம்பமுடியாத மகிழ்ச்சியில் இன்னும் திளைத்து வருவதாகவும் கூறியுள்ள அவர், இது வெறும் கார் மட்டுமல்ல, அன்பு, மரியாதை மற்றும் ஒருவரின் கனவுகளை நம்புவதன் வலிமைக்கான சான்று என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.