சமீபத்திய ஒரு பேட்டியில் தனது குடும்பம் குறித்து தனது அம்மா லட்சுமி குறித்து தவறாக பேசியது குறித்து நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
1989-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அடவிலோ அபிமன்யூ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா. பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான இவர், பாக்ராஜூவுடன் ராசுக்குட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளர். அந்த வகையில் மில் தொழிலாளி, தையல்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பல படங்களில் நாயகி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான படம் தான் மீரா. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாடல் காட்சிகள் இன்றும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யாவுடன் விக்ரம் நாயகனாக நடித்திருப்பார்.
தொடர்ந்து, பார்த்திபனுடன் உள்ளே வெளியே, ரஜினிகாந்துடன் எஜமான், சுயம் வரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த ஐஸ்வர்யா, வில்லி குணச்சித்திர வேடங்களில் தற்போது நடித்து வருகிறார், கடந்த ஆண்டு வெளியான தாதா படத்தில் மணிகண்டனின் அம்மாவாக நடித்திருந்தார். சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள ஐஸ்வர்யா, பிரபல நடிகை லட்சுமியின் மகள் என்றாலும், அவரது தாத்தா பாட்டி ஆகியோரும் திரையுலகின் முக்கிய பிரமுகர்களாக இருந்துள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஐஸ்வர்யா பாஸ்கரன், தனது குடும்பம் குறித்தும், தனது அம்மா லட்சுமி குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார். நான் எந்த இடத்திலும், என் குடும்பத்தை பற்றியோ எனது அம்மா பற்றியோ குறை சொல்லி பேச முடியாது. என் அம்மா வெளியில் மேக்கப் போட்டு பெரிய பிரபலமாக இருந்தாலும், வீட்டுக்கு வந்துவிட்டால் சாதாரண பெண் போலத்தான் இருப்பார். அம்மா இதுவரைக்கும் பப், பார்ட்டி என எங்கும் சென்றது கிடையாது.
என் அம்மாவின் ஒரே பொழுதுபோக்கு வீட்டில் வைக்கும் கொலு தான். என் அம்மா நடிகையாக 4 மொழிகளில் பிஸியாக நடித்து வந்தாலும், என்னை அவர் தான் கவனித்துக்கொண்டார். நான் ஸ்கூலுக்கு செல்லும்போது அம்மா தான் என் வேலைகளை செய்வார். என்னை அதிகமாக வளர்த்தது பாட்டி தான் என்றாலும், என்னை நன்றாக பார்த்துக்கொண்டவர் அம்மா. எனக்கு குழந்தை பிறந்தபோது தான் நான் என் அம்மாவை பற்றி புரிந்துகொண்டேன். அம்மாவின் கஷ்டம் எல்லாம் அப்போது தான் எனக்கு தெரிந்தது.
சில வருடங்களுக்கு முன் டி.வி நிகழ்ச்சியில் நான் என் அம்மா மற்றும் குடும்பத்தை பற்றி தவறாக பேசிவிட்டேன். அந்த பேச்சு என் குடும்பத்தை எவ்வளவு பாதித்தது என்று அதன்பிறகுதான் தெரிந்துகொண்டேன். நான் அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என் குடும்பத்தினர் எவ்வளு கஷ்ப்பட்டிருப்பார்கள் என்பதை நினைத்து தான் இனி எங்கும் குடும்பத்தை பற்றி பேசக்கூடாது. அப்படி பேசினால் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமம்.
என் அம்மா யோகாவில் லெஜெண்ட். நான் உடற்பயிற்சி செய்கிறேன். டான்ஸ் ஆடுகிறேன் விளையாடுகிறேன் என்று சொன்னாலும் விடமாட்டார். அவரை பொறுத்தவரை யோகா செய்ய வேண்டும். அது ஒன்று மட்டும் தான் கஷ்டமாக இருக்கும் என்று ஐஸ்வர்யா பாஸ்கரன் மனம் திறந்து பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“