80-90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அம்பிகா தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நிலையில், தான் நடித்து வரும் மல்லி சீரியல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அம்பிகா, 1979-ம் ஆண்டு தமிழில் வெளியான சக்காளத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அந்த 7 நாட்கள், கமல்ஹாசனுடன் காக்கிச்சட்டை, ரஜினிகாந்துடன் படிக்காதவன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நாயகி வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து, முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்திருந்த அம்பிகா, பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷாலின் அம்மாவாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அம்பிகா சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான நாயகி மற்றும் அருவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது மல்லி என்ற புதிய சீரியலில் நடித்து வருகிறார். நிகிதா ராஜேஷ் மல்லியாக நடித்து வரும் இந்த சீரியிலில், நடிகை நளினி, பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருடன் அம்பிகா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் குறித்து சரிகமவுக்கு அம்பிகா அளித்த பேட்டியில், மல்லி சீரியலில் நடிப்பது மிகவும் சந்தோமாக இருக்கிறது. அதுவும் சன்டிவி என்பது கூடுதல் சந்தோஷம். ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு மீண்டும் அங்கு செல்லும்போது சந்தோஷம் அதிகரிக்கும்.
அருவி சீரியல் முடிந்து பெரிய இடைவெளி இல்லாமல், உடனடியாக மல்லி சீரியலில் கமிட் ஆனது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மல்லி சீரியல் சூப்பரா மல்லி மல்லி எல்லோரும் பார்க்க வேண்டும். தெலுங்கில் மல்லி என்றால் மறுபடியும் என்று அர்த்தம். மல்லி சீரியலை அனைவரும் மறுபடி மறுபடி பார்க்க வேண்டும். மல்லி மணக்க வேண்டும். நம்ம மல்லியை மணக்க மணக்க மல்லி மல்லி பார்க்க வேண்டும். இந்த சீரியல் பெரிய அளவில் ஹிட் ஆக வேண்டும்.
இந்த சீரியலில், நளினி மற்றும் பூர்ணிமாவுடன் மீண்டும் இணைந்ததற்கு தயாரிப்பாளருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பூர்ணிமாவுடன் கடைசியாக 83-84-ல் ஒரு மலையாள படத்தில் நடித்தேன். அதன்பிறகு இப்போதுதான் மல்லி சீரியலில் நடிக்கிறேன் அதேபோல் 86-ல் கன்னட படத்தில் நளினியுடன் நடித்தேன். அதன்பிறகு இப்போ தான் நடிக்கிறேன். 40 வருடத்திற்கு பிறகு அவர்களுடன் இணைந்து நடிக்கும்போது ஸ்கூல் ரீ-யூனியன் போல் இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“