ஒரு படத்தை இயக்கியர் என்று டைட்டில் கார்டில் ஒரு பெயர் வந்தாலும், ஒரு சில படங்களுக்கு உண்மையான இயக்குனர்கள் வேறு ஒருவராக இருக்கும். அந்த வகையில் பானுமதி நடித்த ஒரு படத்தில், இடைவேளை முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது உண்மையான இயக்குனர் வந்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன் என பானுமதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில், நடிகை, பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் பானுமதி. சினிமாவில் எல்லா துறைகளிலும் தனது திறமையை வளர்த்துக்கொண்ட இவர், தனக்கு தோன்றுவதை அப்படியே பேசும் தைரியசாளி என்று பலரும் சொல்ல கேட்டிருப்போம். அதேபோல் தனது படங்களில் தன்னை விட யாரும் சிறப்பாக நடித்துவிட கூடாது என்பதால் அவர்களுடன் போட்டி போட்டு நடிக்கும் மனப்பான்மை கொண்டவர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பானுமதி, 1957-ம் ஆண்டு மக்களை பெற்ற மகராசி என்ற படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்தார். கே.சோமு என்பவர் இயக்கிய இந்த படத்திற்கு, கதை திரைக்கதை வசனம் எழுதியவர் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு, மருதகாசி, தஞ்சை ராமய்யா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒருநாள் மேகங்கள் சூரிய வெளிச்சத்தை மறைத்ததால் சிறிது நேரம் படப்பிடிப்பு தடைபட்டது. அப்போது ஏ.பி.நாகராஜன், பாத்ரூம் சென்றிருந்தார். அவர் வருவதற்கு முன்பாக சூரிய வெளிச்சம் வந்துவிட்டது. இதன் காரணமாக இயக்குனராக இருந்த கே.சோமு உதவியாளரிடம் சொல்லி, பானுமதியை படப்பிடிப்புக்கு அழைத்துள்ளார். ஆனால் பானுமதி வரவில்லை.
இதன் பிறகு இயக்குனராக இருந்த கே.சோமுவே பானுமதியிடம் நேராக வந்து சூரிய வெளிச்சம் வந்துவிட்டது படப்பிடிப்புக்கு வாங்கம்மா என்று சொல்ல, சூரிய வெளிச்சம் வந்துவிட்டது. ஆனால் படத்தின் உண்மையான இயக்குனர் வரவில்லையே என்று கூறியுள்ளார். இந்த படத்தை உண்மையாக இயக்கியது இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தான். ஆனால் டைட்டில் கார்டில் படத்தை இயக்கியவர் கே.சோமு என்று தான் இருக்கும். அதேபோல் 1980-ம் ஆண்டு வெளியான ஒருதலை ராகம் படத்தை இயக்கியவர் இப்ராஹிம் பெயர் வந்தாலும், படத்தை உண்மையாக இயக்கியது டி.ராஜேந்தர் தான். அவரின் முதல் படம் இது.
அதேபோல் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியது கஸ்தூரி ராஜா என்று படத்தில் வந்தாலும், உண்மையாக அந்த படத்தை இயக்கியது தனுஷின் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் தான் என்று கஸ்தூரி ராஜாவே பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். செல்வராகவன் முதலில் இயக்கிய படம் துள்ளுவதோ இளமை தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“