தமிழ் சினிமாவில் பெண் காமெடி கேரக்டர் என்றால் மனோரமாவுக்கு அடுத்து நினைவுக்கு வருபவர் கோவை சரளா. 1979-ம் ஆண்டு வெளியான வெள்ளிரதம் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமான இவர், பாக்யராஜ் இயக்கம் மற்றும் நடிப்பில் பெரிய வெற்றிப்படமாக அமைந்த முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
அதன்பிறகு வைதேசி காத்திருந்தால், தம்பிக்கு எந்த ஊரு சின்ன வீடு, காதல் பரிசு உள்ளிட்ட பல படங்களில் தனது காமெடி மூலம் தனி முத்திரை பதித்த கோவை சரளா, சதிலீலாவதி படத்தில் கமல்ஹாசனின் மனைவியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் கமல் – கோவை சரளா இடையேயான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதேபோல் தனது இளம் வயதிலேயே சின்ன வீடு படத்தில் நடிகர் பாக்யராஜூவின் அம்மாவாக நடித்திருப்பார். அதேபோல் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சூரி உள்ளிட்ட காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து அசத்திய கோவை சரளா, கரகாட்டகாரன் படத்தில் நடித்தது இன்றளவும் கோவை சரளாவின் நடிப்பை ரசிக்கும் படங்களில் ஒன்றாக உள்ளது
சமீபத்தில் வெளியான செம்பி படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்த கோவை சரளா, நடிகரும் இயக்குனருமாக பாக்யராஜ் தன்னை நாயகியாக ஆக்குகிறேன் என்று கூறி ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். சித்ரா லட்சுமனனின் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கோவை சரளா தனது சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
சிறுவயதில் என் அப்பாவின் மூலம் வெள்ளிரதம் படம் கிடைத்தது. அந்த படம் முடிந்து நாள் படிக்க சென்றுவிட்டேன். +2 முடித்துவிட்டு டைப்ரைட்டிங் க்ளாஸ் சென்றேன். அதன்பிறகு டைப் ரைட்டராக வேலைக்கு சேர்ந்தபோது நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வீட்டில் விடவில்லை. அதன்பிறகு உன்னாவிரதம் எல்லாம் இருந்து அதற்கு அனுமதி வாங்கி நடித்தேன்.
கிட்டத்தட்ட 50 நாடகங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். பாக்யராஜ் என் வீட்டுக்கு பக்கத்துவீட்டுக்காரர். அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். அப்போது நான் சினிமாவில் ஹீரோவாகிவிட்டால் நீதான் நாயகி என்று சொல்லியிருந்தார். அப்போது சுவரில்லாத சித்திரங்கள் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால் அவர் என்னை கண்டுகொள்ளவில்லை. பெரிய ஆளாக மாறிவிட்டதால் நம்மை மறந்துவிட்டார் என்று நினைத்தேன்.
அப்போது ஒருநாள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அவரை பார்க்க நான் அங்கு போனபோது அதிர்ச்சியான அவர் நீ எதுக்கு இங்க வந்த என்று கேட்டார். உங்களை பார்க்கத்தான் வந்தேன் என்று நான் சொன்னேன். நீ வீட்டுக்கு போ என்று சொல்லிவிட்டு அதன்பிறகு வீட்டுக்கு வந்தார். அப்போது என்னை நாயகி ஆக்குகிறேன் என்று சொன்னீர்களே என்று கேட்டேன்.
அப்போது அவர் நான் இப்போ முந்தானை முடிச்சு எடுக்க போகிறேன். அதுல எல்லா கேரக்டரும் பிக்ஸ் ஆகிடுச்சு இருந்தாலும் உனக்கு ஒரு கேரக்டர் கொடுக்கிறேன். நீ நடி என்று சொன்னார். ஆனால் நீங்கள் நாயகி ஆக்குகிறேன் என்றுதானே சொன்னீர்கள் என்று சொன்னேன். அதெல்லாம் பேசக்கூடாது நான் சொல்றேன் நீ நடி என்று சொன்னார். அப்படி வந்தது தான் முந்தானை முடிச்சு என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil