சினிமாவில் தனது, 14-வது வயதில் என்ட்ரி ஆகி, முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற நடிகை ஒருவர், 21வயதில் மரணமடைந்த சம்பவம் அப்போதைய சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நடிகை தமிழ் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். அவர் யார் தெரியுமா?
1984-ம் ஆண்டு வெளியான பாவையா என்ற குறும்படத்தின் மூலம் அறிமுகமானவர் மோனிஷா உன்னி. 1971-ம் ஆண்டு கேரளா மாநிலம் கோழிக்கூடு பகுதியில் பிறந்த இவர், தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூருவில் முடித்துள்ளார். 1986-ம் ஆண்டு நக்ஷத்தங்கள் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாக மோனிஷா உன்னி, பாலச்சந்திர மேனனுடன், ரிதுபீடம், மம்முட்டியுடன், சயம் சத்யா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
1986-ல் வெளியான நக்ஷத்தங்கள் என்ற தனது முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றிருந்த மோனிஷா உன்னி, இந்த படத்தின் ரீமேக்காக 1987-ம் ஆண்டு வெளியான பூக்கள் விடும் தூது படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து லாயர் பாரதி தேவி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக மோனிஷா உன்னி, 1988-ல் வெளியான சிரஞ்சீவி சுதாகர் என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமாகி 2 கேரக்டரில் நடித்திருந்தார்.
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஆர்யன் படத்தில் நடித்திருந்த மோனிஷா உன்னி, இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான திராவிடன் படத்தில் சத்யராஜூவுடன் இணைந்து நடித்திருந்தார். 1992-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 12-ந் தேதி கார்த்திக் நடிப்பில் வெளியான, உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குறிப்பாக ‘என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது. இதன் மூலம் மோனிஷா உன்னி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பல படங்ளை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியான நிலையில், அதே ஆண்டு டிசம்பர் மாதம் மோனிஷா உன்னி கார் விபத்தில் மரணமடைந்தார். மலையாளத்தில் செப்படிவிட்யா என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, மோனிஷா விபத்தில் சிக்கினார்.
6 வருடங்களில் 25 படங்கள் நடித்திருந்த மோனிஷா உன்னி, கடைசியாக தமிழில் மூன்றாவது கண் என்ற படத்தில் நடித்திருந்தார். மணிவண்ணன் இயக்கத்தில் சரத்குமார், நிழல்கள்ரவி, ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், மோனஷா இறந்த பிறகு 1993-ம் ஆண்டு வெளியானது. இதற்கு முன்பு மோனிஷா தமிழில் கடைசியாக நடித்த உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் படத்தில் அவர் பாதியில் இறந்துவிடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த படம் வெளியான 6 மாதத்தில் மோனிஷா உண்மையில் மரணமடைந்தார்.