தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையில் உள்ள மேல வழுத்துார் கிராமத்தில் அமைந்திருக்கும் ஆற்றங்கரை ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் கோயில் இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனின் குலதெய்வக் கோயிலாகும். இந்த கோவிலில் இன்று இருவரும் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர். நயன்தாரா வந்திருப்பதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கோயில் முன்பு திரண்டனர்.
பாதுகாப்பிற்காக ஆண், பெண் போலீசார் நிறுத்தப்பட்டனர். கும்பகோணத்தைச் சேர்ந்த ஸ்வீட் ரவி என்பவர் இருவரும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். கோயில் பூசாரி, ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்தார். அப்போது நீண்ட நேரம் கும்பிட்டபடி நயன்தாரா மனமுருகி வேண்டிக்கொண்டார்.
பின்னர், இருவரும் பொங்கல் வைத்து, பரிவார தெய்வங்களான சன்னாசி, முனீஸ்வரர், நல்ல வீரப்பசாமி, மதுரை வீரன், நொண்டி கருப்பன், நாகலிங்கேஸ்வரர் ஆகிய சுவாமிகளை வழிபட பரிவார தெய்வங்களுக்கு தீபம் காட்டப்பட்டது. இருவரும் ஒன்றாக சாமி கும்பிட்டு திருநீர், குங்குமம் பூசிக் கொண்டனர். கோயிலுக்குள் ஏராளமானோர் வர முயன்றதால் கோயில் வெளிக்கதவை பூட்டி விட்டனர்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாமி கும்பிடுவதைப் பலரும் வீடியோ எடுத்ததால் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது. நயன்தாராவை பார்த்தவர்கள் ரொம்ப சிம்பிளாக வந்திருப்பதாகப் பேசிக்கொண்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் நயன்தாராவுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
இது குறித்து அவர்களுடன் இருந்தவர்கள் கூறுகையில்,`திருமணத்திற்கு முன்பு குலதெய்வக் கோயிலுக்கு வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் பொங்கல் வைத்தனர். இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வழிப்பட்டனர். இதையடுத்து கணவன், மனைவி சண்டை சச்சரவின்றி வாழ்வதற்கான சிறப்பு பெற்ற ஸ்தலமான ஆதி கும்பேஸ்வரர் கோயிலிலும் வழிப்பட்டனர். இதைத் தொடர்ந்து திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதைத் தொடர்ந்து நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்குத் தாயானார். அப்போதே எல்லாம் நல்லபடியாக முடிந்த பின்னர் மீண்டும் குலதெய்வக் கோயிலுக்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவதாக இருவரும் வேண்டிக் கொண்டனர்.
அதற்கு முன்பாக, ‘தங்கள் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் எல்லாம் நல்லபடியாக அமைய வேண்டும்’ என்பதற்காக குலதெய்வக் கோயிலுக்கு வந்து வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு ஊருக்குத் திரும்பிச் செல்வதாகத் தெரிவித்தனர்.
முன்னதாக, திருமணமத்திற்கு முன்பு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் இக்கோயிலுக்கு ஒன்றாக வந்து பொங்கல் வைத்து வழிப்பட்டதும், திருமணம் நன்கு நடைபெற்ற நிலையில் குழந்தை பேரு பெற்றபின் தம்பதி சமேதமாக மீண்டும் விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்ய இன்று வந்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“