இயக்குனர் மகேந்திரனை திருமணம் செய்துகொண்டதே நான் வாழ்க்கையில் செய்த மிக பெரிய தவறு என்று அவரது மனைவியுஞம் நடிகையுமான பிரேமி தெரிவித்துள்ளது திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் என சிறந்த படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் மகேந்திரன். ரஜினிகாந்த் நடிப்பை வெளிக்கொண்டு வந்த முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் காமராஜ் என்ற படத்தின் மூலம் நடிகர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் வில்லனாக நடித்திருந்தார்
ரஜினிகாந்துடன் பேட்ட, சசிகுமாருடன் கொம்பு வச்ச சிங்கம், உதயநிதியுடன் நிமிர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மகேந்திரன், கடந்த 2019-ம் ஆண்டு மரணமடைந்தார். இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மகேந்தினின் மனைவி நான் வாழ்க்கையில செய்த மிகப்பெரிய தவறு மகேந்திரனை திருமணம் செய்துகொண்டது தான் என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய திரையுலகில் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ள நடிகை பிரேமி, திரையுலகில் வந்து 60 ஆண்டுகளை கடந்துள்ளார். என்னை பார்த்தால் யாரும் நடிகை என்று சொல்ல மாட்டார்கள் நானும் நடிகை என்பதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டேன். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக மட்டுமே நான் நடிக்க வந்தேன். சிவாஜி நடித்த அன்பு படத்தில் எனது அப்பா நடித்துள்ளார்.
சிவாஜி கணேசன் எனக்கு தூரத்து உறவினர். பல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்திருந்தாலும் எனக்கு பிடித்த இயக்குனர் ஸ்ரீதர் தான். மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படம் என் வாழ்க்கையை மாற்றியது. ஒரு கட்டத்தில் சினிமாவிற்கு இடைவெளி விட்டேன். 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைத்துறைக்கு வந்தபோது பல மாற்றங்கள் இருந்தது.
ரீ-என்டரியில் ராமராஜனுடன் தங்கமான ராசா படத்தில் நடித்தேன். பல நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்திருந்தேன். மறைந்த நடிகர் செந்தாமரை தான் மகேந்திரனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர் முள்ளும் மலரும் படத்திற்கே என்னை அழைத்தார். ஆனால் நான் போகவில்லை. உதரிப்பூக்கள் படத்திற்கு இவர் தான் இயக்குனர் என்பது தெரியாமலே ஒப்புக்கொண்டேன். அந்த படத்தின் ஆடிஷனில் மகேந்திரன் இருந்தார். எங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது. அவர் திருமணமானவர் என்று தெரிந்தும் அவர் வாழ்க்கையில் குறுக்கிட்டேன்.
நான் அந்த தவறை செய்திருக்க கூடாது. அந்த தப்புக்கு தான் இப்போ அனுவிச்சிட்டு இருக்கேன். 7 வருடங்கள் நாங்கள் ஒன்றாக இருந்தோம். எங்களுக்கு ஒரு மகன் பிறந்தார். அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லாததால் 2 குடும்பங்களையும் சமாளிக்க கஷ்டப்பட்டார். அதனால் மகேந்திரன் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அந்த காலக்கட்டத்தில் நான் மனஉளைச்சலில் இருந்ததால் என் அண்ணன் குடும்பத்தினர் என்னை அரவணைத்தார்கள்.
அதன்பிறகு தனி ஆளாக மகனை வளர்த்து இன்று நல்ல நிலையில் இருக்கிறேன். மகேந்திரனுடன் வாழ்ந்த 7 வருடங்களும் அவருக்கு சரியான வருமானம் இல்லாததால் நான் தையல் தைத்து அப்பளம் போட்டு கொடுப்பது என பல வேலைகளை செய்தேன் என்று நடிகை பிரேமி மனம் திறந்து பேசியுள்ளார். பெட்டர் டுடே யூடியூப் செனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“