தெலுங்கானா மாநிலத்தில் ஷாப்பிங் மால் திறப்பு விழாவிற்கு சென்ற நடிகை பிரியங்கா மோகன் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது மேடை சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது தான் நலமுடன் இருப்பதாக பிரியங்கா தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரிங்கா மோகன், சமீபத்தில் வெளியான சூர்யாஸ் சாட்டார்டே என்ற படத்தில் நானியுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது ஜெயம்ரவியுடன் பிரதர், தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், தெலுங்கில் தே கால் ஹிம் ஓஜி ஆகிய படங்களில் நடித்து வரும் பிரியங்கா, அவ்வப்போது தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
அந்த வகையில், தற்போது தெலுங்கானா மாநிலம் தோரூரில் கசம் என்ற ஷாப்பில் மால் திறப்பு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ஹனுமண்டலா ஜான்சி ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்த நிலையில், நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட மேடையில் இருந்து பிரியங்கா மோகன் பேசிக்கொண்டு இருக்கும்போது மேடை திடீரென சரிந்தது. இதனால் மேடையில் இருந்து அனைவரும் விழுந்தனர்.
மேடையில் அதிகமானவர்கள் இருந்ததால், மேடை சரிந்தது என்று கூறப்படும் நிலையில், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தப்பித்தனர். இது குறித்து பிரியங்கா மோகன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று தோரூரில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிறிய விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் நான் தப்பித்தேன். இப்போது நான் நலமாக இருக்கிறேன் என்பதை எனது நலம் விரும்பிகளுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வேகமாக குணமடைய பிரார்த்திக்கிறேன். அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். நிகழ்வில் கலந்துகொண்ட காங்கிரஸ தலைவர் ஜான்சி ரெட்டிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், மேடை சரிந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“