சமீபத்தில் விஷால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பெரும் வைரலாக பரவிய நிலையில், சமூகவலைதளங்களில் நடிகைகள் பற்றி அவதூறாக பேசுபவர்களை நடிகர் விஷால் செருப்பால் அடிப்பாரா? அவர் அப்படி செய்தால் நான் விளக்கமாறு எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில். அங்கு உள்ள உச்ச நடிகர்கள் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சில நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உட்பட நிர்வாகிகள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே , நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கதலைவருமான விஷால சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சினிமாவில் நடிக்க வருபவர்களிடம் யாராவது அட்ஜஸ்மெண்ட் கேட்டால் அவர்களை அந்த இடத்திலேயே செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். விஷாலின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் விஷால் இப்படி பேசலாமா, விஷால் சொல்வது போல் பெண்கள் அவ்வாறு செய்தால், அடுத்து அவர்களுக்கு வரும் பிரச்சனையை யார் பார்ப்பது?
அட்ஜஸ்மெண்ட் பிரச்சனைகளை சந்திக்கும் நடிகைகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பது நடிகர் சங்கத்தின் கடமை. தலைமையில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாமல் இவ்வாறு பேசுவது சரியா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகாவிடம் விஷால் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ராதிகா, விஷால் பேசியது கொஞ்சம் கூட சரி இல்லை. அவர் ஒரு பொறுப்பில் இருக்கிறார். அந்த பொறுப்பை உணர்ந்து பேசியிருக்க வேண்டும். இன்று காலையில் நான் பார்த்த ஒரு வீடியோவில் 4 பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்தியாளர்கள் கூட அல்ல. ஆனால் நடிகைகள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள் என்று அவர்கள் அந்த வீடியோவில் பேசுகிறார்கள். இவ்வாறு சமூகவலைதளங்களில் நடிகைகள் குறித்து அவதூறாக பேசுபவர்களை விஷால் செருப்பால் அடிப்பாரா?
விஷால் அப்படி செய்தால் நான் விளக்கமாறு எடுத்து வர தயார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாடகி சின்மயி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். அது உண்மையா பொய்யா என்று கூட யாரும் காது கொடுத்து விசாரிக்கவல்லை. அதன்பிறகு சின்மயிக்கு வாய்ப்பே இல்லாமல் போனது. அவரது நிலை இப்போது எப்படி இருக்கிறது? அதேபோல் ஒருவர் பிரச்சனையை வெளியில் சொன்னால் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது.
தைரியாக சொல்லுங்கள் நாங்கள் உங்களுக்கு துணையாக இருக்கிறோம் என்று பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் சொல்ல வேண்டும். ஆனால் அந்த பொறுப்பை தட்டி கழிப்பது போல் பேசக்கூடாது என்று நடிகை ராதிகா சரத்குமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“