தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்கள் பலருடன இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை ரம்பா, கமல்ஹாசனுடன் காதலா, காதலா, ரஜனிகாந்துடன் அருணாச்சலம் என தலா ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இதில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் ரம்பா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்பா. இந்த படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு சில படங்களில் நடித்த இவர், ரஜினிகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய அருணாச்சலம் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தில் சௌந்தர்யா நாயகியாக நடித்திருந்தாலும், ரம்பா ரஜினிகாந்துடன் கடைவரை பயணிக்கும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது திருமணமாகி சினிமாவில் இருந்து விலகியுள்ள ரம்பா, ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் 3 படங்கள் நடித்தபின் அவர், என்னிடம் மகிழ்ச்சியான செய்தி, அடுத்து நீங்க ரஜினி படத்தில் நடிக்க போறீங்க என்று சொன்னார்.
அவர் சொன்னதை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு சில வாரங்களில் அந்த படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது. அந்த படத்தில் நடித்த சௌந்தர்யாவும் நானும் மிகவும் நெருக்கமாக மாறினோம். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்போம். அப்போது ரஜினி சார் சௌந்தர்யா பார்க்க இன்டலிஜெணட் மாதிரி இருக்கு ஆனா வெகுளி, ரம்பா வெகுளியா இருக்கு ஆனா இன்டலிஜெண்ட் என்று சொல்வார்.
நான் அருணாச்சலம் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது சல்மான் கானுடன் இன்னொரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். ஹைதராபாத்தில் அருணாச்சலம் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, சல்மான்கான் அங்கு வந்திருந்தார். அவரை பார்த்தவுடன் ஓடிச்சென்று கட்டிபிடித்து, வணக்கம் சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டு வந்தேன். இதை எல்லாம் ரஜினி சார் பார்த்துக்கொண்டே இருந்துள்ளார்.
அதன்பிறகு படப்பிடிப்பு தளத்தில் ரஜினி சார் எல்லோரிடமும் கோபமாக பேசிக்கொண்டு இருக்கிறார். சுந்தர்.சி சார் உட்பட அனைவரும் என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். என்னை பிரச்சனை என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது சுந்தர்.சி சார் என்னிடம் என்ன ரம்பா இப்படி பண்ணிட்ட என்று கேட்க, என்ன பண்ணேன் என்று எனக்கே தெரியவில்லை. அதன்பிறகு நீங்களே ரஜினி சார்ட்ட பேசுங்க என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
அப்போது ரஜினி சார் என்னிடம் வந்து, என்னாச்சு ஏன்டா குழந்தையை அழவச்சீங்க, என்று கேட்டார். அப்புறம் தான் சமாதானம் ஆனேன். அதன்பிறகு அங்கிருந்த சிலரை நிக்க வச்சிட்டு, இதுவரைக்கும் ரம்பா நமக்கு எப்படி வணக்கம் சொல்வாங்க என்று கேட்டார். எல்லோரும் நான் எப்படி சொல்வேனோ அப்படியே சொன்னார்கள். அப்போ ரஜினி சார் நான் சல்மான் கானுக்கு கட்டிப்பிடித்து வணக்கம் சொன்னதை செய்து காட்டினார்.
நாங்க தென்னிந்திய நடிகர்கள் என்பதால் ஓரவஞ்சனை செய்றீங்களா என்று கேட்டார். நான் ஒரு நிமிஷம் ஆடி போய்ட்டேன். ரஜினி சார் இப்படி செய்வார்னு நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அதன்பிறகு வழக்கமாக ஷூட்டிங் நடந்தது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“