ஆன்லைனில் மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வரும் நிலையில், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரபல நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
2012-ம் ஆண்டு தமிழில் வெளியான அம்புலி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. தொடர்ந்து கவலை வேண்டாம், வால்டர், மகா உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற இவர், தற்போது எதிர்வினையாற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும், பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள சனம் ஷெட்டி தற்போது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் நான் இன்று ஒரு விழிப்புணர்வு வீடியோவுடன் வந்திருக்கிறேன். எனக்கே விழிப்புணவு பத்தவில்லை. நானே இன்று ஒரு ட்ராப் காலுக்கு ஆளாகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், போன்களில் உங்கள் தகவல்களை யாரேனும் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று நானே பலருக்கு சொல்லியிருக்கிறேன். ஆனால் இன்று வந்த காலில் உங்கள் நம்பர் 2 மணி நேரத்தில் டி-ஆக்டிவேட் ஆக உள்ளது. இந்த நம்பர் மீது 25 வழக்குகள் பதிவாகியுள்ளதாக சொன்னவுடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்ன சொல்றீங்க என்று கேட்டபோது, இந்த சிம் மும்பையில் வாங்கப்பட்டது. இதில் இருந்து பலருக்கும் மிரட்டல் கால் போயிருக்கிறது என்று சொன்னார்கள்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் போகிறது. அங்கு ஒரு பெரிய ஆளு மாதிரி விஜய் சோபையா, என்பவர் நீங்கள் இதை செய்திருக்கிறீர்கள் என்று பட்டியலை சொல்கிறார். இதை கேட்டு நான் எனக்கு மும்பையில் யாரையும் தெரியாது. இந்த ஒரு நம்பர் தவிர என்னிடம் வேறு நம்பர் இல்லை என்று சொன்னேன். உங்கள் தகவல்களை கொடுங்கள். அப்படி கொடுத்தால் தான் நான் புகார் எடுத்துக்கொள்வேன். இல்லை என்றால் உங்கள் நம்பர் போய்விடும். நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்று அவர் சொன்னார்.
அப்போது தான் எனக்கு தெரிந்தது டெலிகாம் டிபார்ட்மெண்ட் என்றால் எனது ஆதார் நம்பர் இருக்க வேண்டுமே என்று யோசித்தேன். அப்போது தான் இது தவறான கால் என்று எனக்கு தோன்றியது. எனககு தெரிந்த ஒரு பெண்ணுக்கு இந்த மாதிரி ஒரு கால் வந்து அவர்கள் ஒரு லிங்கை க்ளிக் செய்துவிட்டார்கள். அப்போது அவரின்போன் ஹேக் செய்யப்பட்டு வங்கி கணக்கு விபரங்கள் திருடப்பட்டது. தயவு செய்து இப்படி ஏதாவது கால் வந்தால் எந்த தகவல்களையும் கொடுக்காதீர்கள். எந்த லிங்கையும் க்ளிக் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“