திருமணம் செய்துகொண்டால், சினிமாவில் நாயகியாக வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை இப்போது இருந்தாலும், நடிகை சரோஜா தேவி திருமணத்திற்கு பிறகும் நாயகியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்ட சரோஜா தேவி, மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்து ஒரு படத்தில் மட்டும் நடித்துவிடு என்று அவரது அம்மா கூறியுள்ளார்.
அவரின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அடுத்து ஒரு படத்தில் நடித்த சரோஜா தேவி, மீண்டும் பெங்களூர் சென்று தனது பள்ளி படிப்பை தொடர முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில், தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமண்யம், தான் கன்னடத்தில் இயக்க உள்ள கட்ச தேவயானி என்ற படத்தில் சரோஜா தேவி நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட, அம்மாவின் வற்புறுத்தலால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய சரோஜா தேவி அந்த படத்தில் நடித்திருந்தார்.
இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், அடுத்தடுத்து சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது. அதன்பிறகு தான், தமிழில் திருமணம் படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து சிவாஜியின் தங்கமலை ரசகியம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான செங்கோட்டை சிங்கம் படம் தான் சரோஜா தேவி நாயகியாக நடித்த முதல் படம்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் இயக்கிய கல்யாணப்பரிசு படத்தில் நடித்த சரோஜா தேவி, 1961-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் திருடாதே படத்தில் இவருடன் ஜோடியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் நடிப்பில் பெரிதாக நாட்டம் இல்லாத சரோஜா தேவி அம்மாவின் வற்புறுத்தலின் காரணமாக நடித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டால் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று 1967-ம் ஆண்டு ஸ்ரீ ஹர்ஷா என்பரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனாலும் அவர் திருமணத்திற்கு பின்புதான் சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் திலீப் குமார். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் சரோஜா தேவியின் கணவரை சந்தித்த அவர், சரோஜா தேவி நல்ல நடிகை, அவரை நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிடாதீங்கள் என்று சொன்னார். அதன்பிறகு உன் திறமையை நீ வீணாக்க வேண்டாம் நீ சினிமாவில் நடி என்று என் கணவர் சொன்னார் என சரோஜா தேவி குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“