![எம்.ஜி.ஆர் காட்டிய அன்பு... ஆனால் அவருடன் நடிக்க விரும்பாத சாவித்திரி: கிளாசிக் ஃப்ளாஷ்பேக்](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/12/Jemini-Savithri.jpg)
தென்னிந்திய சினிமாவின் நடிகையர் திலகம் என்று பெயரெடுத்து முன்னணி நடிகை சாவித்ரி. 1936-ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர், சிறுவயதில் தனது தாய் தந்தையை இழந்ததால் தனது பெரியப்பா சௌத்ரியின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார். பள்ளிக்கு செல்லும்போது தனது 13 வயதில் பெரியப்பா சௌத்ரியுடன் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்த சாவித்ரி நடிகர் ஜெமினி கணேசனை சந்தித்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், அவரது 16-வது வயதில், 1951-ம் ஆண்டு வெளியான பாதாள பைரவி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார். தமிழ் தெலுங்கில் வெளியான இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் சாவித்ரி தோன்றியிருந்தார்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/12/Jemini-Savithri1.jpg)
அதனைத் தொடர்ந்து, ரூபாவதி, ஆதர்சனம் படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த சாவித்ரி, 1952-ம் ஆண்டு வெளியான பெல்லி சூசி சூடு என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்ததை தொடர்ந்து, அதே ஆண்டு தமிழில் வெளியான கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
இதனிடையே 1952-ம் ஆண்டே நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்ட சாவித்ரி 1953-ம் ஆண்டு வெளியான மனம்போல் மாங்கல்யம் என்ற படத்தில் முதன் முதலாக ஜெமினிகனேசனுடன் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தமிழ் தெலுங்கு கனன்னடம் என அப்போதைய முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/12/Kamal.jpg)
இதில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் படம் களத்தூர் கண்ணம்மா படத்தில் அவரின் அம்மாவாக நடித்திருந்தார். இன்றைய காலக்கட்டத்திலும் அண்ணன் தங்கை பாசப்பிணைப்பு பற்றி பேசும் படமாக உள்ள பாசமலர் படத்தில் சிவாஜியின் தங்கையாக நடித்திருந்தார். திருவிளையாடல், கைகொடுத்த தெய்வம், பார்த்தால் பசி தீரும், கற்பகம் உள்ளிட்ட பல படங்கள் சாவித்ரியின் நடிப்புக்கு பாராட்டுக்களை பெற்றார்.
தென்னிந்திய சினிமாவின் நடிகையர் திலகம் என்று பெயரெடுத்த சாவித்ரி தனது 30 வருட சினிமா வாழ்க்கையில் 252 படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சாவித்ரிக்கு அவரது வாழக்கையின் இருண்ட பங்கங்களும் உள்ளது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த வகையில் பழம்பெரும் நடிகரான ராஜேஷ் நடிகை சாவித்ரி குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/12/Pasamalai.jpg)
சாவித்ரி படம் தயாரிக்கும் முயற்சியில் தனது சொத்துக்களை இழந்தார். அவருடன் இருந்து நீ சரியா எல்லாம் பண்ணுவ எல்லாரும் செய்யும்போது உனக்கு என்ன கண்டிப்பா உன்னால முடியும் பண்ணு என்று சொன்னவர்கள் எல்லாம் அவர் பணத்தை இழந்த பின் அவரை கைவிட்டுவிட்டார்கள். அனைத்து சொத்துக்களும் பறிபோய்விட்டது. பணம் நடிகை நிலம் என சாவித்ரியிடம் வாங்கிய அத்தனையும் வாங்கியவர்களே வைத்துக்கொண்டார்.
இதை எல்லாம் தெரிந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்து வெளியில் வந்த சாவித்ரியிடம் நான் போய்ட்டு வரேன்மா என்று டிரைவர் வந்து சொல்கிறார். அப்போது சாவித்ரி கொஞ்சம் நில்லுப்பா என்று சொல்லி அவர் ஓட்டிய காரின் சாவி மற்றும் ஆர்.சி புக்கை அவரிடம் கொடுத்து இதை வைத்து பிழைத்துக்கொள் என்று அனுப்பிவிடுகிறார்.
இந்த காரை எடுத்துக்கொண்டு கேரளா சென்ற அந்த டிரைவர் பெரிய டிராவல்ஸ் கம்பெனி தொடங்கி பெரிய ஆளாகிவிட்டார். சமீபத்தில் தான் அவர் இறந்துவிட்டார் என்று ராஜேஷ் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே திருமணமாகிய ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்டது தவறு.
![publive-image publive-image](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2022/12/Savithri-MGR.jpg)
திருமணத்திற்கு முன் அவருக்கு திரையுலகில் நிறைய தொடர்புகள் இருந்ததாக சொல்கிறார்கள் ஆனால் அவது தனிப்பட்ட விஷயங்களில் யாரும் தலையிட முடியாது. எல்லோரும் நல்லவர் இல்லை எல்லோரும் கெட்டவர்களும் இல்லை. நல்லது கெட்டதும் சேர்ந்தவன்தான் மனிதன் என்று கீதையில் குறிப்பிட்டுள்ளது. அதுபோலத்தான் நாமும். சாவித்ரியுடன் தொடர்பில் இருந்த பலரை எம்.ஜி.ஆர் போனில் எச்சரித்துள்ளார். சிலரை தனியாக அழைத்து வந்து பேசியுள்ளார்.
ஆனால் இவை அனைத்து செயல்களையும் எம்.ஜி.ஆர். தானே ஏற்றுக்கொண்டார். சாவித்ரிக்காத்தான் இதை செய்தேன் என்று அவர் ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. இவர் அவரிடம் அன்பாக இருந்தார் ஆனால் எம்.ஜி.ஆர்.டன் நடிக்க சாவித்ரி ஆர்வம் காட்டவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தனது 46வது வயதில் உடல் மெலிந்து 19 மாதங்கள் கோமாவில் இருந்த நடிகை சாவித்ரி 1981-ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது நினைவுதினம் இன்று.
சாவித்ரியின் வாழக்கை வரலாறு நடிகையர் திலகம் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.