இணையதளங்களில் தன்னைப்பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சீதா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பல வருங்களாக சினிமாவில் இருந்தாலும், தொடக்கத்தில் இருந்தே தன்னைப்பற்றி வதந்திகள் பரவி வருவதாக கூறியுள்ளார்.
90-களின் முற்பகுதியில் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சீதா. பாண்டியராஜன் இயக்கததில் வெளியான ஆண்பாவம் படத்தில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து தொடர் வெற்றிப்படங்களை கொடுத்திருந்தார். அதேபோல் குரு சிஷ்யன் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த சீதா அந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள சீதா, நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பார்த்திபன் இயக்கிய முதல் படமான புதிய பாதை படத்தில் அவருடன் இணைந்து நடித்த சீதா அவரையே காதலித்து திருமணமும் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய சீதா, ஒரு கட்டத்தில் பார்த்திபனை விவாரகரத்து செய்துவிட்டு தனியாக வாழ தொடங்கினார்
அதன்பிறகு சீரியல் நடிகர் சதீஷ் என்பரை திருமணம் செய்த சீதாவுக்கு அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. இதனால் அவரையும் விவாரத்து செய்து விட்டு தற்போது தனியாக வாழ்ந்து வரும் சீதா, அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல யூடியூப் சேனல்களில் பேட்டியும் அளித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் அவர் தனது முன்னாள் கணவர் பார்த்திபன் குறித்து பேசியது இணையத்தில் வைரலாக பரவியது.
இதனிடையே சமீபத்தில் தன்னை பற்றி வரும் வதந்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய சீதா, நான் வீடு கூட இல்லாமல் கஷ்டப்படுகிறேன். பலரின் வீடுகளுக்கு சென்று பெருக்கி சுத்தம் செய்து அதில் இருந்து வரும் வருமானத்தில் வாழ்ந்து வருவதாக ஒரு நடிகர் யூடியூப் சேனலில் என்னை பற்றி கூறியுள்ளார். மற்றொருவர் நான் இறந்துவிட்டேன் என்றும் கூறியிருந்தார். இதை கேட்டு பல ஆண்டுகளாக என்னுடன் பேசாமல் இருந்த பலரும் என்னிடம் போன் செய்து நலம் விசாரித்தார்கள்.
இந்த மாதிரியான வதந்திகள் எனக்கு புதிது அல்ல. நான் சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்திலேயே இது போன்ற வதந்திகளை பார்த்திருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் இப்போது பேசுவது போன்று கூட நான் பேசமாட்டேன். அமைதியாக இருப்பேன். அதே சமயம் எனது வேலைகளில் கவனமாக இருப்பேன். ஆனாலும் என்னை பற்றிய தவறான வதந்திகள் இப்போ வரைக்கும் பரவி வருவது ஏன் என்று தெரியவில்லை.
நடிகராக இருந்து இப்போது தன்னை ஒரு பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொள்ளும் நபர் ஒருவர் ஒவ்வொருவரை பற்றியும் தவறாக பேசி வருகிறார். அந்த நடிகரோட கர்மா அடுத்தவர்களை பற்றி தவறாக பேசி அதில் இருந்து வரும் வருமானத்தில் உயிர் வாழ வேண்டும் என்று கர்மா இருக்கிறது. இதனால் தான் கண்டமேனிக்கு பேசி வருகிறார். சில நேரங்களில் இது பிரச்சனையாக தெரியவில்லை என்றாலும், சில நேரங்களில் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“