அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்கியிருந்தபோது, அவர்களுக்காக நடிகைகள் வரவழைக்கப்பட்டதாகவும், இதில் முக்கிய நடிகையாக த்ரிஷா அழைக்கப்பட்டதாகவும், முன்னாள் அ.தி.மு.க நிர்வாகி ஏ.வி.ராஜூ கூறிய வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது குறித்து தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ, அ.தி.மு.க ஆட்சியில் சென்னை கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, பல நடிகைகள் அங்கு வந்தார்கள். இதை பிரபல நடிகர் ஒருவர் தான் ஏற்பாடு செய்தார். இதில் ஒரு எம்.எல்.ஏ கேட்ட நடிகைக்கு ரூ25 லட்சம் கொடுத்து அழைத்து வந்தார்கள். யார் யாருக்கு நடிகைகள் வேண்டும் என்று கேட்டுவிட்டு, அவரவர் கேட்ட நடிகைகள் அங்கு வரவழைக்கப்பட்டார்கள்.
ரூ25 லட்சம் கொடுத்து அழைத்துவரப்பட்டவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்று அவரது பெயரையும் தனது பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த பேட்டியை பார்த்தவர்கள் அவர் கூறிய நடிகை த்ரிஷா தான் என்பதை தெரிந்துகொண்ட நிலையில், பாடகி சின்மயி அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே தன்னை பற்றி யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ தன்னிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கததில் வெளியிட்டுள்ள நோட்டீஸில், அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ பேசிய யூடியூப் வீடியோவின் லிங்கை குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, செய்தித்தாள்கள், இணையதளங்கள், மற்றும் சமூகவலைதளங்களில் உள்ளிட்ட எதிலும், எங்களது வாடிக்கையாளர் குறித்து கருத்துக்கள் வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். எங்கள் வாடிக்கையாளர் குறித்து நீங்கள் வெளியிட்ட கருத்துகள் இதுவரை வெளி வந்த செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள் மற்றும் இணைதளங்களில் உள்ள பதிவுகளை அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உங்கள் சொந்த செலவில் எடுக்க வேண்டும். இந்த அறிவிப்பை நீங்கள் பெற்ற 24 மணி நேரத்திற்குள் எங்களுடைய வாடிக்கையாளரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன், 5-க்கு மேற்பட்ட பிரபலமான புகழ்பெற்ற தேசிய ஆங்கில நாளிதழ் மற்றும் புகழ்பெற்ற தமிழ் நாளிதழ் ஆகியவற்றில் மன்னிப்பு தொடர்பான செய்திகள் வெளியிட வேண்டும்.
நீங்கள் மன்னிப்பு கேட்பது தொடர்பான யூடியூப் வீடியோக்களை வெளியிடுங்கள். இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிரான சிவில் நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் உட்பட பொருத்தமான சட்ட நடவடிக்கைள் எடுக்கப்படும். அதன் அனைத்து செலவுகள் மற்றும் விளைவுகளுக்கு நீங்கள் பொறுப்பாவீர்கள் என்று த்ரிஷாவின் வழக்கறிஞர்கள் அனுப்பியுள்ள நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“