தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகையாக வலம் வரும் வடிவுக்காரசி, தனக்கு பிடித்த சாப்பாடு வகைகளை பட்டியலிட்டுக்கொண்டே சாப்பிடும், நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நடிகை நளினி, சூரி ஆகியோர் தனக்கு சமைத்து கொடுத்த சாப்பாடு குறித்து பேசியுள்ளார்.
1978-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வடிவுக்காரசி. அதன்பிறகு கன்னிப்பருவத்திலே உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்த இவர், ஒரு கட்டத்தில் வில்லியாக பல படங்களில் நடிக்க தொடங்கினார். சிவாஜி கணேசன் தொடங்கி, ரஜினிகாந்த் வரை பல நடிகர்களின் படங்களில் வில்லியாக கலக்கியவர் தான் வடிவுக்கரசி.
தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இவர், புரோவோகோ டிவி என்ற யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு பிடித்த சாப்பாடு குறித்து விவரமாக பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருச்சியில் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருந்தபோது, அங்கு நிறைய ரசிகர்கள் வந்தார்கள். அவர்கள் என்னிட்ம் உங்களுக்கு பிடித்த உணவு என்ன என்று கேட்க நான் முட்டையும் ரசமும் எனக்கு பிடிக்கும் என்று சொன்னேன்.
உடனே அங்கிருந்த அனைவரும் தங்களின் வீடுகளில் இருந்து விதவிதமாக முட்டை மற்றும் ரசம் செய்து கொண்டு வந்து கொடுத்தார்கள். இப்படிப்பட்ட ரசிகர்கள் அந்த காலக்கட்டத்தில் இருந்தார்கள். அதேபோல் சைத்தில் கிள்ளு சாம்பார் மற்றும் கருணை கிழங்கு எனக்கு பிடிக்கும். அதனால் சீரியலில் நடிக்கும்போது யார் வீட்டில் இப்படி செய்தாலும் எனக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள். வெரைட்டி ரைசில் லெமன் புளியோதரை ரொம்ப பிடிக்கும். சினிமா ஷூட்டிங்கில் தயாரிப்பாளர்கள் கொடுத்த அசைவ உணவுகளை விட உடன் நடிக்கும் நடிகர்கள் கொடுக்கும் அசைவ உணவு தான் அதிகம்.
பாண்டியராஜன், மற்றும் பிரபு ஷூட்டிங் போய்விட்டால், அவர்கள் ஷுட்டிங்கில் இருக்கும்வரை அவர்கள் வீ்ட்டில் இருந்து சாப்பாடு வந்துகொண்டே இருக்கும். நடிகை நளினிக்கு சாப்பாடு ரொம்ப பிரியம். நாங்கள் அவருடன் அஞ்சாத சிங்கம் என்ற படத்தில் நடித்தோம். அப்போது நளினி கருவாட்டு குழம்பு சாப்பிட்டால் நல்லா இருக்கும் அக்கா என்று சொல்ல, அவரின் அம்மா திட்டிக்கொண்டே இருப்பார். நளினி நீ அதிகம் சாப்பிடாதே அப்புறம் என்னை போல் அம்மா கேரக்டருக்கு வந்துடுவ என்று நான் சொல்வேன்.
கருடன் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது, நடிகர் சூரி எனக்கு மட்டன் கோலா உருண்டை செய்து கொண்டு வந்தார். அந்த படத்தின் ஷூட்டிங் தேனியில் நடைபெற்றது. அப்போது சூரி என்னிடம் என்ன சாப்பாடு பிடிக்கும் என்று கேட்டபோது நான் கோலா உருண்டை பிடிக்கும் என்று சொன்னேன். மறுநாள் மதுரையில் அவரது ஹோட்டலில் இருந்து கோலா உருண்டை வரவைத்தார். ஷூட்டிங் முடியும் வரைக்கும் அவரது ஹோட்டலில் இருந்து சாப்பாடு வந்தது.
நீங்கள் எப்போது மதுரைக்கு வந்தாலும், நம்ம ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்வார். கே4 என்று அவரது பாட்னர்களுடன் இணைந்து ஒரு ஹோட்டல் வைத்திருக்கிறார். தேனி போக வேண்டும் என்றால் மதுரை வழியாக சென்று அந்த ஹோட்டலில் தங்கிவிட்டு செல்வோம் என்று நடிகை வடிவுக்கரசி மனம் திறந்து பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“