தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியான அதிரடி திரைப்படம் "குட் பேட் அக்லி". இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. வெளியான குறுகிய காலத்திலேயே சுமார் ரூ300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, "குட் பேட் அக்லி" திரைப்படம் இப்போது ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகி வருகிறது. முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிக்ஸ் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுள்ளது. வரும் மே 8, 2025 முதல் நெட்ஃபிக்ஸ் சந்தாதாரர்கள் "குட் பேட் அக்லி" திரைப்படத்தை வீட்டில் இருந்தபடியே பார்த்து மகிழலாம். தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது
இதுகுறித்து நெட்ஃபிக்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அவர் நல்லவராக இருந்தது போதும். இனி கெட்டவராக மாறப்போகிறார், விஷயங்கள் மோசமாகப் போகப்போகின்றன. மே 8 முதல் நெட்ஃபிக்ஸில் "குட் பேட் அக்லி" பாருங்கள். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில்," என்று குறிப்பிட்டுள்ளனர்.
"குட் பேட் அக்லி" திரைப்படத்தின் கதைக்களம் ஒரு முன்னாள் தாதாவை பற்றி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தனது மகனை கடத்திய கும்பலிடமிருந்து அவனை மீட்க மீண்டும் தனது வன்முறை நிறைந்த கடந்த காலத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஹீரோ தள்ளப்படுகிறார். இப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உணர்ச்சிகளையும் கலந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது. அஜித்தின் நடிப்பு இப்படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது.
வில்லன் கேரக்டரில் நடிகர் அர்ஜுன் தாஸின் இரட்டை வேடம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா கிருஷ்ணன் முன்னணி கேரக்டரில் நடிக்க, பிரபு, பிரசாந்த், யோகி பாபு, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.