அமரன் திரைப்படத்தில் தனது மொபைல் எண் பயன்படுத்தியதால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி, கல்லூரி மாணவர் ஒருவர் ரூ1.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழங்கு தொடர்ந்த நிலையில், தற்போது படத்தில் இருந்து அந்த மொபைல் நம்பர் காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
தமிழ்நாட்டை நேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் கேரக்டரில் நடித்திருந்தார். சாய் பல்லவி அவரது மனைவி இந்து கேரக்டரில் நடித்திருந்தார். கமல்ஹாசன் தயாரித்த இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31-ந் தேதி வெளியான அமரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வரும் நிலையில், படத்தில் ஒரு காட்சியில், சாய் பல்லவி தனது மொபைல் எண் எழுதப்பட்ட ஒரு காகிதத்தை ஹீரோ சிவகார்த்திகேயன் மீது வீசுவார். அந்த நம்பரை நோட் செய்த ரசிகர்கள் பலரும் சாய் பல்லவியிடம் பேச வேண்டும் என்று கூறி அந்த நம்பருக்கு அழைக்க தொடங்கியுள்ளனர்.
உண்மையில், அந்த நம்பர் சென்னையைச் சேர்ந்த பொறியியல் மாணவர் வி.வி.வாகீசன் உடையது. இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ள அவர், இந்த திரைப்படத்தில் தனது தொலைபேசி எண்ணைக் காட்டியதால் சாய் பல்லவியின் ரசிகர்கள் தன்னை இடைவிடாமல் தொலைபேசியில் அழைத்து வருவதாக கூறி, அமரன் தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் தனது மொபைல் எண் காட்டப்பட்டதால், தனக்கு ஏற்பட்ட மனை உளைச்சலுக்காக ரூ1.1 கோடி நஷ்டஈடு வேண்டும் என்று கூறியுள்ள அவர், படத்திலிருந்து தனது எண்ணை உடனடியாக நீக்குமாறும், அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், படத்தின் சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த மாணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மாணவரின் இந்த மனு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது படத்தில் இடம்பெற்ற இந்த மொபைல் நம்பர் தொடர்பான காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி நீக்கப்பட்டு மீண்டும் சென்சார் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“