சமீபத்தில் வெளியான வெற்றிமாறனின் விடுதலை முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகர் ராஜீவ் மேனன், அடிப்படையில் இயக்குனர் மற்றும ஒளிப்பதிவாளர். தற்போது இவர் விடுதலை படத்தில் நடித்ததை பார்த்து இயக்குனர் மணிரத்னம் கிண்டல் செய்துள்ளார்.
1991-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சைதன்யா என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ராஜீவ் மேனன். தொடர்ந்து, சிலுவி என்ற இந்தி படத்தில் பணியாற்றிய இவர், 1995-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இந்த படம் இந்தி மற்றும் தமிழில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
அதன்பிறகு 1997-ம் ஆண்டு அரவிந்த் சாமி பிரபுதேவா, கஜோல் நடிப்பில் வெளியான மின்சார கனவு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜீவ் மேனன், அடுத்து அஜித் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், அபாஸ், தபு ஆகியோர் நடிப்பில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது.
தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய கடல், மற்றும் குரு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ராஜீவ் மேனன், 19 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு ஆகியோர் நடிப்பில் சர்வம் தாளமயம் என்ற படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக இந்த படம் பாராட்டுக்களை பெற்றிருந்தது. தான் இயக்கிய மின்சார கனவு படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்த ராஜீவ் மேனன், அடுத்து மலையாளத்தில் ஹரிக்கிருஷ்ணன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு, 25 வருட இடைவெளிக்கு பிறகு, வெற்றிமாறன் இயக்கத்தில், வெளியான விடுதலை படத்தில், தலைமை செயலாளராக நடித்திருந்தார். இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. தற்போது வெளியாகியுள்ள விடுதலை 2 படத்திலும், ராஜீவ் மேனன் நடிப்பு, பாராட்டுக்களை பெற்று வருகிறது. இயக்கம், ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல், சிங்கர் மற்றும் இசையமைப்பாரளாக ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார்.
பார்ப்பதற்கு ஹீரோ போன்று இருக்கும், ராஜீவ் மேனனை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட இயக்குனர் மணிரத்னம், அவரிடம் பலமுறை நடிக்க கேட்டுள்ளார். ஆனால் ஒவ்வொருமுறையும் அவரின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள, ராஜீவ் மேனன், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துள்ளார். இது குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாருடைய இயக்கத்திலும் நடிக்காத ராஜீவ் மேனன், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க என்ன காரணம் என்று கேட்டபோது, அதுதான் மணி சார் சொன்னாரு, நான் உன்னை ஹீரோவ கூப்பிட்டேன், நீ இப்போ தாத்தாவா நடிக்கிற என்று சொன்னார். நான் ஒளிப்பதிவில் எப்படி ஷாட் வைக்க வேண்டும் என்று தான் ப்ளான் செய்வேன். நடிப்பதற்க நான் எந்த ப்ளானும் செய்யவில்லை. வெற்றிமாறனுடன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நான் பேசிய விதத்தை பார்த்து இவன் கவர்ண்டெட் மாதிரி இருககானே என்று யோசித்திருக்கலாம்.
பணக்காரன், அரசாங்க அதிகாரி, அதிகாரத்தில் இருப்பவர் கேரக்டருக்கு சரியாக இருப்பார் இவன்தான் வில்லன் என்று, வெற்றிமாறன் என்னை அழைத்திருக்கலாம். இதுக்கு முன்னாடி நான் நடித்திருக்கிறேன். ஹரிக்கிருஷ்ணன்ஸ் படத்தில் நடித்தது எனக்கு பிடிக்கவில்லை என்று ராஜீவ் மேனன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.