க்ளாசிக் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சாவித்ரி. ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார். 1934-ம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த சாவித்ரி, 1951-ம் ஆண்டு வெளியான பாதாள பைரவி என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து 1952-ல் வெளியான கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாவித்ரி, பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜியுடன் இவர் நடித்த பாசமலர், மற்றும் பாவ மன்னிப்பு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சாவித்ரிக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது. ஒரு கட்டத்தில் நடிகர் ஜெமினி கணேசனுடன் காதலில் விழுந்த சாவித்ரி அவரையே திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் பல படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு வெற்றி கிடைக்காத நிலையில், ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார். அந்த வகையில் 1971-ம் ஆண்டு வெளியான ப்ராப்தம் என்ற படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்து படத்தை தயாரித்திருந்தார். ஆனால் இந்த படம் தோல்வியடைந்ததால் இதுவே சாவித்ரி தமிழில் நாயகியாக நடித்த கடைசி படமாக மாறியது.
தொடர்ந்து மலையாளம், தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருந்த சாவித்ரி ஒருமுறை படப்பிடிப்புக்கு சென்றபோது கொள்ளையர்களிடம் நடுக்காட்டில் சிக்கிக்கொண்டாலும் அவர்களிடம் சாமார்த்தியமாக பேசி அங்கிருந்து தப்பித்து வந்த சம்பவமும் நடந்துள்ளது. இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள நடிகை குட்டி பத்மினி கூறுகையில்,
ஒரு முறை மைசூரில் ஷூட்டிங் நடைபெற்றது. இதற்காக நான் மற்றும் நடிகைகள் சிலரை அழைத்துக்கொண்டு சாவித்ரி அக்கா காரை ஓட்டிக்கொண்டு சென்றார். ஸ்ரீஹரி செல்லும்போது நடுரோட்டில் யானைக்கூட்டம் வந்துவிட்டது. இதனால் சாவித்ரி அக்கா காரை பின்னோக்க எடுத்தபோது பின்னால் சுமார் 10 கொள்ளையர்கள் நின்றிருந்தனர். அவர்களை பார்த்தவுடன் எங்களுக்கு பயம் வந்துவிட்டது.
ஆனால் பயப்படாமல் காரை நிறுத்திவிட்டு இறங்கிய சாவித்ரி அக்கா, நீங்கள் யாரும் இறங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அந்த கொள்ளையர்களிடம் சென்று நான் நடிகை என்னை உங்களுக்கு தெரியாதா? உங்களை மகிழ்விக்கும் படங்களில் நடிக்கதான் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். எங்களிடம் என்ன இருக் போகிறது. இந்த 5 ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டார்.
அதன்பிறகு அவர்கள் கொள்ளையர்கள் அனைவரும் சகஜமாக பேச தொடங்கிவிட்டனர். மேலும் நாங்கள் அந்த காட்டை கடக்கும் வரை யானைகளை விரட்டிவிட்டு எங்களுக்கு பாதுகாப்பாக வந்தனர். அப்படி பேசி கொள்ளையர்களையே சமாளித்தவர் சாவித்ரி என்று குட்டி பத்மினி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“