எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் திரைப்படத்தில் டி.எம்.சௌந்திரராஜன் பாடிய ஒரு பாடலை எடுத்துவிட்டு, அதே பாடலை ஜெயலலிதா குரலில் பதிவு செய்யுமாறு எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். அதற்கு காரணம் என்ன தெரியுமா?
Advertisment
1969-ம் ஆண்டு கே.சங்கர் இயக்கத்தில் வெளியான படம் அடிமைப்பெண். எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில், ஜெயலலிதா அசோகன் சந்திரபாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்த படத்திற்கு கவிஞர் வாலி, ஆலங்குடி சோமு உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
இந்த படத்தில் வாலி எழுதிய அம்மா என்றால் என்ற பாடலை நடிகையும் முன்னாள் முதல்வருமா ஜெயலலிதா பாடியிருந்தார். இதுதான் அவர் பாடிய முதல் திரைப்பட பாடல். கதைப்படி இந்த படத்தில் மன்னன் வேங்கையன் இறந்துவிட, அவரது மகன் வெங்கையன் ஊமையாக இருப்பார். அவரை பேச வைத்து தைரியமானவராக மாற்றுவது ஜெயலலிதாவின் பணியாக இருக்கும்.
இந்த நேரத்தில் தான் ஜெயலலிதா பாடும் அந்த பாடல் வரும். இந்த பாடலை முதலில் டி.எம்.சௌந்திரராஜன் குரலில் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் பதிவு செய்துள்ளார். இந்த பாடலும் படக்குழுவினருக்கு திருப்திகரமாக அமைந்த நிலையில், எம்.ஜி.ஆருக்கு திருப்தியை கொடுக்கவில்லை. கதைப்படி நான் ஊமை. நானே பாடல் பாடுவது போன்று வந்தால் அது நன்றாக இருக்காது என்று கூறிய எம்.ஜி.ஆர், இந்த பாடலை அம்முவே (ஜெயலலிதா) பாடி நடிக்கட்டும் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு இந்த பாடல் ஜெயலலிதா குரலில் பதிவு செய்யப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டது. இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடல் மிஸ் ஆனாலும், தாயில்லாமல் நானில்லை, உன்னைப்பார்த்து, ஏமாற்றாதே என 3 பாடல்களை டி.எம்.சௌந்திரராஜன் பாடியிருந்தார். அதேபோல் இந்த படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா என்ற பாடல் மூலம் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தமிழ் சினிமாவில் பாடகராக பிரபலமானார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“