/indian-express-tamil/media/media_files/2025/09/09/tamil-cinema-msv-deva-2025-09-09-21-40-15.jpg)
தேவாவுக்கு தேனிசை தென்றல் என்ற பட்டத்தை கொடுத்த எம்.எஸ்.வி, இந்த பட்டம் அளிக்கும் விழாவில், இந்த பையனுக்கு எதுக்கு பட்டம் என்று பேச தொடங்கியபோது தான் அதிர்ச்சியடைந்துவிட்டதாக தேவா எம்.எஸ்.வி உடனான ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. தொடர்ந்து 1989-ம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகராசா படத்தின் மூலம் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக வளர்ந்த இவர், அடுத்து தனது 3-வது படமாக வைகாசி பொறந்தாச்சு படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றைக்கும் இளைஞர்களை துள்ளி விளையாட வைக்கும் அளவுக்கு பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, ரஜினிக்கு அண்ணாமலை, பாட்ஷா, சரத்குமாருக்கு சூரியன், வேடன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ள தேவா, இன்றைக்கும், இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். பாட்ஷா படம் பார்க்கும்போது எனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை. ஆனால் அந்த படத்தை தனது இசையால் தூக்கி நிறுத்தியவர் தான் தேவா என்று நடிகர் ரஜினிகாந்த் பல மேடைகளில் கூறியுள்ளார். அந்த அளவிற்கு, தேவா இசையில், அசத்திய பல படங்கள் உள்ளன.
இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் பாடகராகவும் இருக்கும் தேவா, ஒரு சில படங்களில் இசைமைப்பாளர் தேவாவாகவே வந்து நடித்திருப்பார். இதனிடையே தேனிசை தென்றல் என்ற பட்டத்துடன் வலம் வரும் தேவாவுக்கு இந்த பட்டத்தை கொடுத்தவரே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். இது குறித்து அவரிடமே பேசிய தேவா, நான் பக்தி பாடல்களுக்கு இசையமைத்து வரும்போது கருமாரியம்மன் கோவிலில், எனக்கு ஒரு பட்டம் கொடுக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது,
அந்த நிகழ்ச்சியில், நீங்கள் தான் தலைமை ஏற்று எனக்கு பட்டம் கொடுக்க இருந்தீர்கள். அப்போது நீங்கள் பேசுகையில், தேவாவுக்கு எதுக்காக பட்டம், என்று கேட்டதும் நான் ஆடிப்போய்விட்டேன். என்ன அண்ணன் இப்படி கேட்கிறார் என்று நினைத்தேன். இந்த பையனுக்கு எதுக்கு பட்டம், யாராவது படம் கொடுங்க என்று அடுத்த வார்த்தை சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் சொன்ன அடுத்த வாரமே எனக்கு ஒரு படம் புக் ஆனது. அப்போது நான் உங்களிடம் வந்து ஆசீவாதம் வாங்கிக்கொண்டு சென்றேன் என்று தேவா கூறியுள்ளார்.
இடையில் பேசிய எம்.எஸ்.வி இவ்வளவு அறிவும் திறமையையும் இருக்கும் ஒருவருக்கு பட்டம் கொடுப்பதை விட படம் கொடுங்கள் என்று நான் சொன்னேன். வைதேசி வந்தாச்சு என்ற படத்தில் எனக்கு கூட ஒரு பாடல் கொடுத்தாய் என்று நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.