தமிழ் சினிமாவில், நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், அரசியல் விமர்சகர், பத்திரிக்கையாளர் என பன்முக திறமை கொண்டவர் ‘’சோ’’ குடும்பத்தின் எதிர்ப்பை மீறி தனது முதல் படமான பார் மகளே பார் என்ற படத்தில் நடித்த இவர், அடுத்து சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு எஸ்.பாலச்சந்தர் இயக்கிய நடு இரவில் என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.
சோ சினிமாவில் கால்பதித்த சமயத்தில் அவருக்கு முன்பே புகழ் பெற்றிருந்த கருணாநிதியுடன் நெருக்கம் காட்டினார். அதேபோல் தனது வசனத்தில் புதிய வசனங்களை வேறு யாரும் சேர்த்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கருணாநிதி, சோவுக்கு மட்டும் அந்த அனுமதியை கொடுத்து, தனது வசனத்தில் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் மாற்றி பேசலாம் என்று கூறியிருந்தார்.
இவர்களுக்கு இடையில், நெருக்கமான நட்பு இருந்தாலும், அரசியல் விமர்சனங்களில் கருணாநிதியை சோ பலமுறை விமர்சித்ததும், அதற்கு கருணாநிதி எதிர்வினை ஆற்றியதும், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பின் உச்சம் என்று சொல்லலாம். கருணாநிதியை போல் எம்.ஜி.ஆருடனும் அதிகம் நெருக்கம் காட்டியவர் தான் சோ. திமுகவில் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கருணாநிதி பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது, எம்.ஜி.ஆர் எங்கள் தங்கம் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் சோவும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், கடைசி நாள் படப்பிடிப்புக்காக அனைவரும் தயாராகிக்கொண்டிருந்தனர். இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு எம்.ஜி.ஆர் வெளிநாடு செல்வதாக இருந்தது. அவர் வெளிநாடு சென்றால் திரும்பி வர ஒரு மாத காலம் ஆகும் என்பதால், அன்றைக்கு அனைத்து காட்சிகளையும் படமாக்கி முடிக்க படக்குழு தீர்மானித்தது.
இந்த படத்தின் படப்பிடிப்புக்காக காலை 8 மணிக்கு தயாரிப்பாளர் முரசொலி மாறன், இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு ஆகியோர் சத்யா ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார்கள். சோவும் 8 மணிக்கு வந்துவிட்ட நிலையில், 8.10 மணிக்கு எம்.ஜி.ஆர் ஸ்டூடியோவுக்குள் வந்துள்ளார். அவர் அவ்வளவு சீக்கிரமாக வந்துவிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதேபோல் எம்.ஜி.ஆருக்கு தனியாக ஒரு காட்சி, சோவுடன் இணைந்து ஒரு காட்சி அவ்வளவுதான் படப்பிடிப்பு, எம்.ஜி.ஆர் மேக்கப் போட்டால் 2 மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று யோசித்தனர்.
ஆனால் 8.10 மணிக்கு வந்த எம்.ஜி.ஆர் மேக்கப் போட்டுக்கொள்ளாமல், அருகில் இருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். இப்படியே 12 மணி ஆனபோது திடீரென காரை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பியுள்ளார். இது பற்றி கேட்டபோது. ஒரு இன்னும் ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்துவிடுவார் என்று சொன்னார்கள். அப்படியே ஒரு மணிக்கு வந்துவிட்டாலும் அதன்பிறகு படப்பிடிப்புக்கு தயாராகவில்லை.
இதை பார்த்துக்கொண்டிருந்த சோ, இன்னைக்கு படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா, நடக்காது என்றால் சொல்லிவிடுங்கள், நான் சென்றுவிடுகிறேன் என்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவரோ எனக்கு ஒரு உதவி செய்கிறீர்களா என்று கேட்டுள்ளார். இதற்கு சோ சொல்லுங்க என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று சொல்ல, கொஞ்ச நேரம் பேசாமல் இருங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட சோ கண்டிப்பா இன்னைக்கு படப்பிடிப்பு நடக்கும் என்று நம்பி இருந்துள்ளார்.
இரவு 9 மணி ஆனபோது, படக்குழு அனைவரும் இன்னைக்கு படப்பிடிப்பு இல்லை என்று நினைத்தபோது எம்.ஜி.ஆர் மேக்கப் போட தொடங்கியுள்ளார். அவர் 10 மணிக்கு வந்தவுடன் சரியாக இரவு 12 மணிக்கு படப்பிடிப்பு முடிந்துள்ளது. எம்.ஜி.ஆர் அன்றைக்கு ஏன் அப்படி நடந்துகொண்டார் என்பது எனக்கு தெரியவில்லை. எம்.ஜி.ஆர் கருணாநிதி ஆகிய இருவருடனும் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் அதற்கான காரணம் தான் எனக்கு தெரியவில்லை என சோ குறிப்பிட்டுள்ளார் என்று இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“