க்ளாசிக் சினிமாவில் தொடங்கி இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் பலரின்’ இசையில் பாடியுள்ள பி.சுசிலா, இளையராஜாவின் இசையில் பாடல்கள் பாடியிருந்தாலும் எஸ்.ஜானகி அளவுக்கு அதிகமாக பாடல்களை பாடியதில்லை என்ற தகவல் இருக்கிறது. இதற்கு இளையராஜா பி.சுசிலா இடையே எழுந்த மோதல் தான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர். இது உண்மைதானா?
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் இளையராஜா. இசையின் ராஜா, இசைஞானி என்று பல பட்டப்பெயர்கள் இவருக்கு உண்டு. 1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் பாடல்களுக்காகவே பெரிய வெற்றியை கொடுத்த பல படங்கள் உள்ளன.
தற்போது 80 வயதை கடந்துவிட்டாலும், தமிழ் சினிமாவில் இன்னும் இசையில் பல வித்தியாசங்களை காட்டி வரும் இளையராஜா இன்றைய இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவரின் வாழ்க்கை வரலாறு இளையராஜா என்ற பெயரிலேயே படமாக்கப்பட உள்ளது. இதற்காக ஃபர்ஸ்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
இளையராஜாவுக்கு இசை குருவாக இருப்பவர்கள் 3 பேர். அதில் அவரது அண்ணன் பாவலர், தண்ராஜ் மாஸ்டர் அடுத்து இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். அதேபோல் தான் இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பு பல இசையமைப்பாளர்களுக்கு கிட்டார் வாசித்துள்ளார். அப்படி இசையமைப்பாளர் வி.குமார் என்பவருக்கு கிட்டார் வாசிக்கும்போது அங்கு பி.சுசீலா பாடுவதற்காக வந்துள்ளார். அப்போர் பாடலில் பல்லவியை பாடிவிட்டு சரணத்தை பாடாமல் விட்டுள்ளார்.
இதை தெரிந்துகொண்ட இசையமைப்பாளர் வி.குமார் ஏன் சரணத்தை பாடவில்லை என்று கேட்க, இவர்தான் காரணம் என்று இளைராஜாவை கை காட்டியுள்ளார் பி.சுசிலா. கிட்டார் வாசிப்பவர் எனக்கு கார்டு கொடுக்க வேண்டும். ஆனால் அவர் கொடுக்கவில்லை. அதனால் தான் நான் பாடவில்லை என்று சொல்ல, உடனே இளையராஜா நான் கார்டு கொடுத்தேன். அவர் வேண்டுமென்றே என் மீது பழி போடுகிறார் என்று சொல்ல, பி.சுசிலாவோ அவர் எனக்கு கார்டு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நான் இங்கு வாசிக்கத்தான் வந்திருக்கிறேன். சும்மா இருப்பதற்காக வரவில்லை என்று இளையராஜா கோபமாக பேசியுள்ளார்.
இந்த மோதல் இருவருக்கும் இடையே பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் பி.சுசிலாவுக்கு பதிலாக எஸ்.ஜானகிக்கு இளையராஜா அதிக வாய்ப்பு கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இளையராஜாவின் முதல் படமாக அன்னக்கிளி படத்தில் கூட எஸ்.ஜானகி 3 பாடல்கள் பாடியிருந்த நிலையில், சுசீலா ஒரு பாடலை மட்டுமே பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.