முதல் சந்திப்பிலேயே முடிந்தால் என்னை பயன்படுத்திக்கொள் என்று ஒரு கவிஞர் சொல்ல, அதை பார்த்து வியந்துபோன பாரதிராஜா அந்த கவிஞர் எழுதிய புத்தகத்தை படித்து பார்த்துவிட்டு, ஆச்சரியமாகி அவருக்கு தனது படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில், இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் என்பதை தாண்டி தமிழ் சினிமாவிற்கு பல சிறந்த நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வகையில் இவர் அறிமுகப்படுத்திய ஒரு கவிஞர் தான் வைரமுத்து. இப்போது வைரமுத்து – இளையராஜா இடையே மோதல் இருந்து வந்தாலும், ஆரம்பத்தில் இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளது.
1980-ம் ஆண்டு மணிவண்ணன் கதையில் பாரதிராஜா இயக்கிய படம் நிழல்கள். ராஜசேகரன், ரோஹினி, ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த பாடல் கம்போசிங் நடந்தபோது, புதியவர் ஒருவர் பாடல் எழுதினால் நன்றாக இருக்கும் என்று இளையராஜா கூறியுள்ளார். ஏற்கனவே நிறம் மாறாத பூக்கள் படத்திற்காக லொக்கேஷன் பார்க்க சென்றபோது, பாரதிராஜாவின் நண்பர் ஒருவர், வைரமுத்துவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அந்த சமயத்தில் தான் எழுதிய புத்தகம் ஒன்றை பாரதிராஜாவிடம் கொடுத்த வைரமுத்து முடிந்தால் என்னை பயன்படுத்திக்கொள் என்று கூறியுள்ளார். வைரமுத்துவின் இந்த வார்த்தை பாரதிராஜாவை யோசிக்க வைத்த நிலையில், விமானத்தில் வரும்போது அவரது புத்தகத்தை படித்துள்ளார். அந்த புத்தகத்தை படித்து ஆச்சரியமாக அவர், இவருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளார். அப்போது இளையராஜா புதியவருக்கு வாய்ப்பு என்றதும், வைரமுத்து ஞாபகம் பாரதிராஜாவுக்கு வந்துள்ளது.
அப்போது வைரமுத்து மொழிபெயர்ப்பு துறையில் வேலையில், இருந்த நிலையில் அவரை கம்போசிங்க்கு வருமாறு கூறியுள்ளார். அடுத்த நாள் வைரமுத்து கம்போசிக்கு வந்துவிட்ட நிலையில், இளையராஜா டியூனை வாசித்துள்ளார். இந்த டியூனை கேட்ட வைரமுத்து வெளியில் எழுந்து சென்றுள்ளார். அப்போது இளையராஜா பாரதிராஜாவிடம், இப்படி புது ஆட்களை கூட்டி வந்து ஏன்யா என் கழுத்த அறுக்குற என்று கேட்டுள்ளார். அப்போ உள்ளே என்ட்ரி ஆன வைரமுத்து தான் எழுதிய பல்லவியை கொடுத்துள்ளார். அதை படித்து பார்த்த இளையராஜா அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்துள்ளார்.
அந்த பல்லவியை பார்த்துவிட்டு, வைரமுத்துவை நீ கொஞ்சம் வெளியில் இரு என்று இளையராஜா சொல்ல, சரி, இவர் தேறமாட்டார் போல என்று பாரதிராஜா நினைத்துள்ளார். வைரமுத்து வெளியில் சென்றதும், பயங்காரமான ஆளுயா இவன், பெரிய பெரிய யானை எல்லாம் கவிழ்க்க போறான்யா என்று இளையராஜா பாரதிராஜாவிடம் கூறியுள்ளார். இந்த பாடல் தான் நிழல்கள் படத்தில் இடம் பெற்ற ‘’பொன் மாலை பொழுது’’ என்ற பாடல்.
இந்த பாடலை இன்று கேட்டாலும் புதிய பாடல் போன்ற உணர்வை கொடுக்கும். நிழல்கள் படம் வெற்றியை தவறவிட்டாலும், அதில் இடம்பெற்ற பாடல் இன்றுவரை ரசிகாகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“