தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் கே.பாலச்சந்தர் முதல்முறையாக கண்ணதாசனை சந்தித்து பாடல் கேட்டபோது தனது வார்த்தையால் அவரை அழ வைத்துள்ளார் கண்ணதாசன்.
மேடை நாடகங்கள் மூலம் பிரபலமாகி 1965-ம் ஆண்டு வெளியாக நீர்குமிழி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கே.பாலச்சந்தர். தொடர்ந்து, தொடர்ந்து நாணல், மேஜர் சந்திரகாந்த் உள்ளிட்ட படங்கயை இயக்கிய கே.பாலச்சந்தர் தனது 4-வது படமாக 1967-ம் ஆண்டு பாமா விஜயம் என்ற படத்தை இயக்கியிருந்தார். வரவுக்கு மேல் செலவு செய்தால் என்ன விபரீதங்கள் நடக்கும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது இந்த படம்.
முத்துராமன், நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், சவுகார் ஜானகி, காஞ்சனா, ராஜாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில் பாலையா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசைமையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்றைய காலக்கட்டத்திற்கும் பொருந்தும் வகையில் உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கிய கே.பாலச்சந்தர் 13 ஆயிரம் அடி படத்தை எடுத்தபின் படம் நான் நினைத்த மாதிரி வரவில்லை ஏதோ ஒன்று குறைகிறது என்று நினைத்து தனது உதவியாளர்களுடன் பேசியுள்ளார். அப்போது முக்கிய கேரக்டரான பாலையா வரவுக்கு மீறிய செலவு செய்யும் பெண்ணுக்கு உணர்த்துவது போன்ற ஒரு பாடலை வைத்தால் சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
அப்போது கே.பாலச்சந்தரின் உதவியாளர்கள் இந்த பாடலை கண்ணதாசன் எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்ல, முதல்முறையாக கண்ணதாசன் கே.பாலச்சந்தர் படத்தில் இணைகிறார். தொடர்ந்து கண்ணதாசனை சந்தித்த பாலச்சந்தர் படத்தின் முழு கதையையும் சொல்லிவிட்டார். மேலும் தான் எடுத்த 13 ஆயிரம் அடி படத்தையும் எடிட் செய்து கண்ணதாசனுக்கு போட்டு காட்டியுள்ளார்.
கதையும் தெரிந்து எடுத்த படத்தையும் பார்த்துவிட்ட கண்ணதாசன், வருமானத்திற்கு அதிகமாக செலவு பண்றாங்க ''வரவு எட்டனா செலவு பத்தனா அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா'' என்று சொல்கிறார். இதை கேட்ட கே.பாலச்சந்தர் தான் கதை சொல்லி எடுத்த படத்தை போட்டு காட்டி எல்லாம் செய்தும் தான் சொல்ல வந்ததை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டாரே என்று ஆச்சரியடைந்துள்ளார். அதன்பிறகு இதையே பாட்டாக கொடுங்கள் என்றும் கேட்டுள்ளார்.
இதை கேட்ட கண்ணதாசன் நான் பாடல் எழுதவே தொடங்கவில்லை. இது நான் போகிற போக்கில் சொன்ன வரிகள் என்று சொல்ல, இல்லை இதுதான் இந்த படத்திற்கு பொருத்தமாக இருக்கும் இதையே பாட்டாக கொடுங்கள் என்று சொல்ல கண்ணதாசனும் எழுதி கொடுத்துள்ளார். எழுதி முடித்தவுடன் இந்த பாடலை வாங்கி பார்த்த கே.பாலச்சந்தர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இப்படி முதல் சந்திப்பிலேயே கண்ணதாசனின் திறமையை பார்த்து கண்ணீர் விட்டவர் தான் கே.பாலச்சந்தர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.