அவள் ஒரு தொடர்கதை படத்தில் வந்த ‘’தெய்வம் தந்த வீடு’’ என்ற பாடலை எழுத கண்ணதாசன் திணறியதாகவும், தயாரிப்பாளர் திட்டியதால், அதை வைத்தே அவர் பாடலை எழுதியதாகவும், பலரும் கூறி வரும் நிலையில், இது குறித்து கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது கவி நயத்தின் மூலம் பல தத்துவ பாடல்களை கொடுத்துள்ளவர் கவியரசு கண்ணதாசன். 1949-ம் ஆண்டு வெளியான கன்னியின் காதலி என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான கண்ணதாசன், தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் பலருடன் இணைந்து பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் 1974-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தில் ‘’தெய்வம் தந்த வீடு’’ என்ற பெரிய ஹிட் பாடலை கண்ணதாசன் எழுதியிருந்தார்.
இந்த பாடலுக்கான கம்போசிங்கின்போது இசையமைப்பாளர் எம்.எஸ்.வி டியூன் தயார் செய்து வைத்துள்ளார். கண்ணதாசன் பாடல் எழுத அமர்ந்தபோது, முதல் நாள் எதுவும் வரவில்லை. 2-வது நாளும் பாடல் எழுதாத நிலையில், 3-வது நாளிலும் பாடல் கண்ணதாசன், எழுதாததால், எம்.எஸ்.வி அங்கிருந்து கம்பெனி காரில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அந்த கார் வந்தபிறகுதான் கண்ணதாசன் வீட்டுக்கு போக வேண்டும் என்ற நிலையில், மழை பெய்துள்ளது.
அப்போது கண்ணதாசன் தனக்கு சில பொருட்கள் வேண்டும் என்று கேட்க, அந்த படத்தின் தயாரிப்பாளர் பாடல் எழுத முடிவில்லை. உனக்கு இதெல்லாம் தேவையா, மழைக்கு ஒதுங்க என் ஆபீஸ் இருக்கிறது என்று சந்தோஷப்படு என்று கூறியதாகவும், அப்போது தான் கண்ணதாசன் தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்று பாடல் எழுதியுள்ளார் என்று தகவல்கள் இருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் பொய்யானவை என்று அவரின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வீட்டில் இருந்து கிளம்பும்போது கண்ணதாசன் கம்பெனி காரில் சென்றாலும், அவர் பின்னாடியே எங்கள் வீட்டு காரும் செல்லும், கம்போசிங் முடித்துவிட்டு, கண்ணதாசன் தனது காரில் வீடு திரும்பி விடுவார். அதேபோல், எம்.எஸ்.வி கம்பெனி காரில் கம்போசிங்கு சென்றதே இல்லை. அவர், வீட்டில் இருந்து சொந்தக்காரில் தான் கிளம்புவார். அந்த காரில் ஹார்மோனியம் இருந்தால் எம்.எஸ்.வி கம்போசிங் செல்கிறார் என்று அர்த்தம்.
இந்த பாடல் எழுதும்போது, அப்பாவுடன் இருந்தவர் எனது அண்ணன், கண்மணி சுப்பு, மற்றும் வி.பி.சுப்பு ஆகிய இருவரும் தான். அப்பா கண்ணதாசன் பாடலை சொல்ல சொல்ல இவர்கள் இருவரும் தான் எழுதினார்கள். அதனால் கண்ணதாசன் பாடல் எழுத திணறினார் என்பது முற்றிலும் தவறான ஒரு தகவல் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.