இன்றைய சினிமா உலகில் பழம்பெரும் பிரபலமான பாடகராக வலம் வரும் கே.ஜே.யேசுதாஸ், அறிமுகமாவதற்கு கவிஞர் வாலியின் சிபாரிசு தேவைப்பட்டது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
1940-ம் ஆண்டு கொச்சியில் பிறந்த யேசுதாஸ், கடந்த 1963-ம் ஆண்டு வெளியான கொஞ்சும் குமரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் வேதா. அதன்பிறகு பல படங்களில் ஹிட் பாடல்களை பாடி முன்னணி பாடகராக வலம் வந்த யேசுதாஸ், எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பலரின் இசையில் பாடியுள்ளார்.
தற்போதைய காலக்கட்டத்தில் இளையராஜா, ஏ,ஆர்.ரஹ்மான் தொடங்கி டி.இமான் வரை பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள யேசுதாஸ் கடைசியாக, தமிழரசன் என்ற படத்தில் பொருத்தது போதும் என்ற பாடலை பாடியிருந்தார். தற்போது யேசுதாஸ் பாடவில்லை என்றாலும், அவர் பாடிய பல நூறு பாடல்கள் இன்றைய காலக்கட்ட ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யேசுதாஸின் இந்த புகழுக்கு முதலில் அச்சாரம் போட்டவர் கவிஞர் வாலி தான்.
1963-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் முதலியார் தயாரிப்பில் வெளியான கொஞ்சும் குமரி என்ற படம் தான் கே.ஜே.யேசுதாஸ் தமிழில் பாடகராக அறிமுகமான முதல் படம். இந்த படத்திற்கு இசையமைத்தவர் வேதா. மாடர்ன் தியேட்டர்ஸின் வழக்கமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்த இவர், ஒரு ஒல்லியான இளைஞரை பாடல் பாட அழைத்து வந்து அந்த பாடலை பதிவு செய்துள்ளார். ஆனால் அந்த இளைஞர் பாடிய அந்த பாடல் தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரத்திற்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை.
Advertisment
Advertisements
டி.ஆர்.சுந்தரம் இந்த பாடலை விரும்பவில்லை என்று தெரிந்துகொண்ட இசையமைப்பாளர் வேதா, கவிஞர் வாலியிடம் நீங்கள் தான் ஆங்கிலத்தில் பேசுவீர்களே இந்த பையனை பற்றி அவரிடம் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதை கேட்ட வாலி, டி.ஆர். சுந்தரத்திடம் பேசபோக, அவர் என்ன என்று கேட்டுள்ளார். அந்த பையன் நன்றாகத்தானே பாடுகிறான். ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கேட்க, அப்படியாக உங்களுக்கு நம்பிக்கை இருக்கா என்று டி.ஆர்.சுந்தரம் வாலியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு வாலி, நல்லதான் பாடியிருக்கிறான். என்று சொல்ல, உங்களுக்கு பிடித்திருந்தால் சரிதான் என்று டி.ஆர்.சுந்தரம் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அந்த இளைஞர் பாடிய அந்த பாடல் படத்தில் இடம் பெற்றது. அந்த இளைஞர் தான் கே.ஜே.யேசுதாஸ். இந்த தகவலை கவிஞர் வாலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“