தமிழ் சினிமாவில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் கவியரசர் கண்ணதாசன், தனது பாடல்கள் மூலம் வாழ்க்கையின் தத்துவங்களை ஒலிக்க செய்த பெருமைக்கு சொந்தக்காரரான இவரின் முதல் பாடல் உருவான விதம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் 1950- தொடங்கி 70-களின் இறுதிவரை தனது பாடல்கள் மூலம் பல தத்துவ முத்துக்களை அள்ளிக்கொடுத்தவர் கண்ணதாசன். இன்பம் துன்பம், காதல், சோகம், என நவரசங்களையும் தனது பாடல் மூலம் ஒலிக்க செய்த கண்ணதாசன் எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருக்கு ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
மேலும் தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்த கண்ணதாசன், கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என பன்முற திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். ஆனால் தமிழ் சினிமாவில் கண்ணதாசன் எழுதிய முதல் பாடலுக்கு அஸ்திவாரம் கொடுத்தவர் ஒரு பிச்சைக்காரர் என்பது பலரும் அறியாத ஒரு உண்மை. சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையுடன் சுற்றி வந்த கண்ணதாசனுக்கு சண்டமாருதம் என்ற பத்திரிக்கையில் வேலை கிடைக்கிறது.
ஆனால் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தில் சில மாதங்களில் அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு கோவை செல்வதற்காக ரயிலில் ஏறுகிறார். அப்போது நமது ஆசை நிறைவேறுமா நமது வாழ்க்கை இப்படியே போகுமா என்று கண்ணதாசன் யோசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு தம்பதி தங்களது கண் தெரியாத 3 குழந்தைகளுடன் வருகின்றனர். இதை பார்த்த கண்ணதாசன், நமது பிரச்சனையை விட இவர்களது பிரச்சனை மிகவும் கொடியது என்று யோசிக்கிறார்.
அடுத்து ஒரு பிச்சைக்காரர் வருகிறார். அவருக்கும் கண் தெரியவில்லை. இதை பார்த்ததும், கண்ணதாசனுக்கு பரிதாபம் வருகிறது. அப்போது அந்த பிச்சைக்காரர் ஒரு பாடலை பாடுகிறார். ‘’சிறிதும் கவலப்படாதே, மன உறுதியை மட்டும் விட்டுவிடாதே’’ என்று அந்த சிறுமி பாடிய பாடல் கண்ணதாசனை கவர்ந்துவிடுகிறது. என்ன நடந்தாலும் சரி சினிமாவில் பாடல் எழுதியே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்.
தொடர்ந்து கோயம்புத்தூரில் இறங்கிய கண்ணதாசன் ஜூபிட்டர் நிறுவனத்திற்கு செல்கிறார். அங்கு ஒருவரை சந்தித்து வாய்ப்பு கேட்டபோது அவர் கண்ணதாசனை நேராக இயக்குனர் ராம்நாத்திடம் கொண்டு சென்று விட்டு விடுகிறார். புதிய கவிஞரை தேடிக்கொண்டிருந்த ராம்நாத் கண்ணதாசனிடம் சுட்சிவேஷனை சொல்லி பாடல் எழுதி வாருங்கள் நாளை மியூசிக் போடலாம் என்று சொல்லி அனுப்புகிறார்.
அதனால் கோவையில் நண்பர் வீட்டில் தங்கி பாடல் எழுத தயாராகும் கண்ணதாசனுக்கு ரயிலில் அந்த சிறுமி பாடியது நினைவுக்கு வந்து வந்து செல்கிறது. அதேபோல் படத்தின் இயக்குனர் சொன்ன சுட்சிவேஷனும் இந்த பாடலுடன் ஒத்து போகிறது. இதனால் அந்த சிறுமி பாடிய பாடலை அடிப்படையாக வைத்து கண்ணதாசன் ஒரு பாடல் எழுதி இயக்குனரிடம் கொடுக்கிறார். இயக்குனருக்கும் அந்த பாடல் பிடித்துபோக அந்த பாடல் திரையில் ஒலிக்கிறது.
அப்படி வந்த பாடல் தான் ‘’கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’’ கண்ணியின் காதலி என்ற திரைப்படத்தில் வந்த இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. உலகத்திற்கு தனது தத்துவ பாடல்கள் மூலம் பல வெற்றிகளை கொடுத்துள்ள கண்ணதாசனுக்கு முதல் பாடல் எழுத ஊன்றுகோலாக இருந்தது ஒரு பிச்சைக்காரர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“