தமிழ் சினிமாவில் வெளிப்புற படப்பிடிப்புக்கு ஒப்புக்கொள்ளாத எம்.ஜி.ஆர், அன்பே வா படத்தின் படப்பிடிப்புக்கு ஒப்புக்கொண்ட நிலையில், மக்கள் நடமாட்டம் இல்லாத, மலையில் இருந்து 200 அடி பள்ளத்தில் நடைபெற்ற ஷூட்டிங்கில் திடீரென மக்கள் கூட்டம் கூடியதால் எம்.ஜி.ஆர் புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.
ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில் இந்த படத்தில் இடம் பெற்ற, ‘’நான் பார்த்திலே அவர் ஒருத்தியை தான்’’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் இன்றும் ஒரு முக்கிய பாடலாக வலம் வருகிறது. டி.எம்.சௌந்திரராஜன் – பி.சுசிலா இணைந்து பாடிய இந்த பாடல் நன்றாக வந்திருப்பதால், இதற்காக காட்சிகளையும் சிறப்பாக எடுக்க வேண்டும் என்று யோசித்த ஏ.வி.எம்.நிறுவனம் வெளிப்புற படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளது.
பொதுவாக வெளிப்புற படப்பிடிப்புக்கு எம்.ஜி.ஆர் ஒப்புக்கொள்ளாத நிலையில், ஏ.வி.எம் நிறுவனம் அவரிடம் பேசி சம்மதிக்க வைத்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு பொதுமக்கள் யாரும் வந்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்த படக்குழு, மைசூருக்கு அருகில், ஒரு மலையில் இருந்து 200 அடி கீழே, பூக்கள் அதிகம் நிறைந்த பகுதியாக பார்த்து படப்பிடிப்பை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த தகவலை எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவரும் சரி என்று சொல்லி படப்பிடிப்புக்கு கிளம்பியுள்ளார். அந்த மலையின் மேல் இருந்து மரத்தில் கயிறு கட்டி தான் 200 அடி பள்ளத்தில் இறங்க வேண்டும். அப்படி அனைவரும் இறங்கி படப்பிடிப்புக்கு தயாராகியுள்ளனர். அதேபோல் ஷூட்டிங் பார்க்க வரும் மக்களை திசை திருப்ப, வேறொரு இடத்தில் டம்மி கேமராவை வைத்து சிலரை அங்கு உட்கார வைத்துள்ளனர்.
அதன்பிறகு இங்கு படப்பிடிப்பு தொடங்கியபோது, அருகில் இருந்த மரத்தில் இருந்து ஒவ்வொருவராக எட்டிப்பார்த்துள்ளனர் அந்த பகுதி பழங்குடியின மக்கள். மக்கள் கூட்டத்தை பார்த்த எம்.ஜி.ஆர் கோபமாகியுள்ளார். ஆனாலும் வெளிப்புற படப்பிடிப்பு என்றதும், முதல் நாள் இரவே நாளை எடுக்க வேண்டிய காட்சிகளுக்காக நடன பயிற்சியை பெற்றுள்ளார் எம்.ஜி.ஆர்.
அதன் காரணமாக இங்கு எனக்கு எந்த பயிற்சியும் கொடுக்க வேண்டாம். சரோஜா தேவிக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்றால் கொடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அவர் சொன்னபடி படபிடிப்பு நடந்தி முடிக்கப்பட்டு பாடல் காட்சியும் தயாரானது. எம்.ஜி.ஆர் வழக்கத்திற்கு மாறாக பல சேட்டைகள் செய்து இந்த பாடலில் நடித்திருப்பார். இன்றும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.