தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த எம்.ஜி.ஆர், ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பு இல்லாமல் தடுமாறியபோது இயக்குனருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
நாடக நடிகராக இருந்து சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆர், 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த எம்.ஜி.ஆருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதன்பிறகு 2-வது ஹீரோவாக பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர், 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் தயாரித்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆன எம்.ஜி.ஆர் நாயகனாக வெற்றியை கொடுத்த நிலையில், 1952-ம் ஆண்டு பராசக்தி படத்தின் மூலம் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. அதே சமயம் மறுபக்கம், எம்.ஜி.ஆருக்கு பட வாய்ப்பு குறைந்தது,
இந்நிலையில், எம்.ஜி.ஆர் நடிப்பில் ராஜகுமாரி படத்தை தயாரித்த ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் நிறுவனம் அடுத்தாக மனோகரா படத்தை தயாரிக்க முடிவு செய்கிறது. இந்த பட வாய்ப்பு நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த எம்.ஜி.ஆருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மனோகரா படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பார் என்று ஜூப்பிட்டர் பிச்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதன் காரணமாக எம்.ஜி.ஆர் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளார்.
அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் ஜெனோவா என்ற ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்தார். தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் ஒரு நேரத்தில் தயாரான இந்த படத்தில் பி.எஸ்.சரோஜா நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் பணிகள் நடைபெற்ற ஸ்டூடியோவுக்கு எம்.ஜி.ஆர் சென்றிருந்தபோது அங்கு டப்பிங் பணிகள் நடைபெற்றுள்ளது. இதில் எம்.ஜி.ஆருக்கு பதிலாக வேறு ஒருவர் டப்பிங் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
இதை பார்த்த எம்.ஜி.ஆர், என் படத்திற்கு என்னை கேட்காமல் நீங்கள் ஏன் வேறொருவரை வைத்து டப்பிங் பேசுகிறீர்கள் என்று கேட்க, உங்களுக்கு மலையாளம் சரியாக வரவில்லை. அதனால் தான் வேறு ஒருவர் பேசுகிறார் என்று சொல்ல, எனக்கு மலையாளம் சரியாக பேச வரவில்லையா? நீங்கள் இப்படியே பண்ணினால் நான் படப்பிடிப்பை நடத்த விடமாட்டேன் என்று சொல்ல, நீங்கள் இப்படி பண்ணினால் தமிழுக்கும் உங்களை விட்டுவிட்டு வேறு ஒருவரை டப்பிங் பேச வைத்துவிடுவேன் என்று படத்தின் இயக்குனர் எஃப்ஃ.நாகூர் கூறியுள்ளார்.
நான் இல்லாமல் டப்பிங் பணிகள் நடந்தால், எனது வக்கீல் உங்களிடம் வந்து பேசுவார் என்று எம்.ஜி.ஆர் சொல்ல, பரவாயில்லை. தமிழ் மலையாளம் தவிர மற்ற மொழிகளில் படம் எடுத்தால் தான் உங்களிடம் கேட்க வேண்டும். இப்போது இந்த இரண்டு படங்களில் உங்களது அனுமதி வேண்டும் என்று ஒப்பந்தத்தில் இல்லை என்று இயக்குனர் சொல்ல, எம்.ஜி.ஆர் அதன்பிறகு சமாதானம் அடைந்துள்ளார். அடுத்து டப்பிங் பணிகள் முடிந்து ஜெனோவா படம் வெளியானது
ஒரே நேரத்தில் தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியான இந்த படம் தோல்விப்படமாக அமைந்தாலும், எம்.ஜி.ஆர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்றிருந்தார். இதற்கு அவரின் முன்கூட்டியே திட்டமிடுதல் தான் காரணம் என்று ஆலங்குடி வெள்ளைச்சாமி தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“