க்ளாசிக் தமிழ் சினிமாவில் சமூக பொறுப்புள்ள காமெடிக்கு புகழ் பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். சரியில்லாத ஒரு படத்தை கூடதனது காமெடி திறமையால் ஹிட் செய்து அசத்தக்கூடிய திறமையை உள்ளடக்கியிருந்த இவர், சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பஞ்சாயத்து செய்வதிலும் கெட்டிக்காரர். சினிமாவில் ஹீரோ தயாரிப்பாளர் பிரச்சனை, தயாரிப்பாளர் இயக்குனர் மோதல், ஃபைனான்சியர் – தயாரிப்பாளர் மோதல் என பல பிரச்சனைகளை தனது திறமையின் மூலம் இரு பக்கமும் பாதகம் இல்லாமல் தீர்த்து வைத்துள்ளார்.
இந்த மாதிரி ஒரு பிரச்சனை எம்.ஜி.ஆர் படத்திற்கு வர என்.எஸ்.கே அதையும் தீர்த்து வைத்துள்ளார். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாக எம்.ஜி.ஆர் 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த எம்.ஜி.ஆருக்கு, அபிமன்யூ, ரத்னகுமார், மந்திரகுமாரி உள்ளிட்ட படங்கள் வெற்றியை கொடுத்தது.
அந்த வகையில் எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1956-ம் ஆண்டு வெளியான படம் மதுரை வீரன். பானுமதி, பத்மினி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்த இந்த படத்தை லோனா செட்டியார் என்பவர் தயாரித்திருந்தார். எம்.ஜி.ஆர் திரைத்துறையை மெல்ல தனது கைவசத்திற்கு கொண்டு வந்த காலக்கட்த்தில் இந்த படம் தயாரானது. அப்போது தான் நடிக்கும் படங்கள் அனைத்தும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர் படம் பிடித்திருந்தால் வெளியிடலாம். இல்லை என்றால் தனது படத்தையே வெளியிட வேண்டாம் என்று எம்.ஜி.ஆர் சொல்லிவிடுவாராம்.
இதனிடையே மதுரை வீரன் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டது. ஆனாலும் தயாரிப்பாளர் லோனா செட்டியார் நடிகை பத்மனிக்கு கொடுத்த வாக்கின் காரணமாக அவருக்காக எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் தனியாக ஒரு பாடலை படமாக்கியுள்ளார். இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியவர, நாம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறோம். இந்த பாடல் படத்தை கெடுத்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த எம்.ஜி.ஆர் படத்தை வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நான் பணம் போட்டு படம் எடுத்திருக்கிறேன். இதில் என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று லேனா செட்டியார் சொல்ல, இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலுக்கு பஞ்சாய்த்து பண்ண என்.எஸ்,கே வருகிறார். படத்தை பார்த்த என்.எஸ்.கே படத்தில் பாடல் ஒரு தடையாக இல்லை என்பதை புரிந்துகொண்டு எம்.ஜி.ஆரிடம் பேசியுள்ளார்.
அவர் தயாரிப்பாளர் வட்டிக்கு வாங்கி படம் எடுத்திருக்கிறார். இப்போது படம் வெளியாகவில்லை என்றால் பலரும் உன்னை தான் தவறு சொல்வார்கள். அந்த பாடல் படத்திற்கு தடையாக இருந்தால் நானே சொல்லியிருப்பேன். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று அவரை சமாதாப்படுத்தி தயாரிப்பாளர் லேனா செட்டியாருடன் சேர்த்து வைக்கிறார். அதன்பிறகு மதுரை வீரன் படம் வெளியாகி பெரிய வெற்றியை பெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“