க்ளாசிக் சினிமாவின் மெல்லிசை மன்னனாக வலம் வந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்த போதும், தனியாக இசையமைத்தபோது, பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள எம்.எஸ்.வி, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களக்கு தனது பாடல்கள் மூலம் வெற்றியை கொடுத்துள்ளார்.
1952-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான பணம் படத்தின் மூலம் ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைப்பாளராக அறிமுகமான எம்.ஸ்.வி, தொடர்ந்து 50-க்கு மேற்பட்ட படங்களில் இணைந்து இசையமைத்த நிலையில், 1965-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்திற்கு பிறகு இந்த கூட்டணி பிரிந்தது. அதன்பிறகு எம்.எஸ்.வி தனியாகவும், ராமமுர்த்தி தனியாகவும் இசையமைக்க தொடங்கினர்.
இதில் கவிஞர் கண்ணதாசன் மற்றும் வாலி ஆகியோரின் கூட்டணியில் எம்.எஸ்.வி பல ஹிட் பாடல்களை கொடுத்து வந்த நிலையில், அன்றைய காலக்கட்டத்தில் வெளியான எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இசையமைத்து வந்தார். இதனிடையே எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1975-ம் ஆண்டு வெளியான நாளை நமதே என்ற படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைக்க படக்குழுவினர் அவரை அனுகியுள்ளனர். ஆனால் இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நாயகனாக நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் எம்.எஸ்.வி இந்த படத்திற்கு இசையமைக்க மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் எம்.ஜி.ஆரை தொடர்புகொண்டு விஷயத்தை சொல்ல, அவன் அப்படியா சொன்னான் என்று கூறி, உடனடியாக எம்.எஸ்.வி வீட்டுக்கு போன் செய்த எம்.ஜி.ஆர் என்ன விசு உனக்கு என்ன பிரச்சனை ஏன் இப்படி சொன்ன? சம்பளம் கூட அதிகம் வேணும்னா கேளு கொடுக்கிறேன் என்று கூறியள்ளார். அது இல்ல அண்ணே இசையமைக்கும்போது உங்க தலையீடு இருக்கு அதான் எனக்கு இந்த படத்திற்கு இசையமைக்க மனம் வரவில்லை என்று தைரியாமாக கூறியுள்ளார் எம்.எஸ்.வி.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் நான் தலையிட்டதால் தான் பாடல் சரியாக வரவில்லையா என்று கேட்டு, ரிக்ஷாகாரன் படத்தில் கூட நான் தலையிட்டேன் அதில் பாடல் சரியாக வரவில்லையா என்று கேட்டுக்கார். அண்ணே அந்த படத்தில் ஒரு பாடலுக்கான டியூனை மாற்ற சொன்னீங்க. ஆனால் நான் தான் இருக்கட்டும் என்று பிடிவாதமாக வைத்தேன். இப்போ அந்த பாட்டு ஹிட் ஆனதும் இப்படி பேசுறீங்களே என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அமைதியான போனை வைத்துவிட்டு, பட பூஜை அன்று பூஜையில் கலந்துகொள்ளுமாறு எம்.எஸ்.வியை அழைத்துள்ளார்.
அழைப்பை ஏற்று அங்கு வந்த எம்.எஸ்.விக்கு அட்வான்ஸ் கொடுத்த எம்.ஜி.ஆர் இந்த படத்திற்கு நீதான் இசையமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த இடத்தில் எப்படி பேசுவது என்று நினைத்துக்கொண்டு அட்வான்ஸ் பணத்தை வாங்கிய எம்.எஸ்.வி அண்ணே இந்த படத்தின் பாடலில் உங்க தலையீடு இருக்க வேண்டாம் என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். அப்படி வெளியான நாளை நமதே திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
அதே சமயம் இதற்கு முன்னதாக 1949-ம் ஆண்டு வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக்காக 1971-ம் ஆண்டு வெளியான நீரும் நெருப்பும் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில்கவனம் ஈர்க்கவில்லை. இதற்கு காரணம் எம்.ஜி.ஆரின் தலையீடு இருந்ததால் தான் என்று எம்.எஸ்.வி உறுதியாக நம்பியதால் தான் நாளை நமதே படத்திற்கு இசையமைக்க மறுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.