தமிழ் சினிமாவில் நடிகரும் சிறந்த ஓவியருமான சிவக்குமார், பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நிலையில், தொடக்கத்தில், கடவுள் வேடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்க வாய்ப்பு வந்ததை சிவக்குமார் ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் 1965-ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கிய இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, சுரேந்தர் என்ற முக்கிய கேரக்டரில் சிவக்குமார் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சிவக்குமாருக்கு பட வாய்ப்பும் அடுத்தடுத்து கிடைத்து வந்தது.
அடுத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை, தாயே உனக்காக, சரஸ்வதி சபதம் கந்தன் கருணை உள்ளிட்ட படங்களில் நடித்த சிவக்குமாருக்கு ஏ.வி.எம். தயாரிப்பில் உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் முதல்முறையாக இணைந்து நடிப்பதால் அதிகமான எதிர்பார்ப்புடன் இருந்த சிவக்குமார் ஒரு சில வாரங்கள் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இந்த படத்தில் சிவக்குமார் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்திருந்தார்.
உயர்ந்த மனிதன் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே, எம்.ஜி.ஆரிடம் இருந்து சிவக்குமாருக்கு வந்து அவரை போய் சந்தித்துள்ளார் சிவக்குமார். அப்போது நான் புதிதாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அதில் ஒரு கேரக்டர் இருக்கிறது. நீ அதில் நடிக்கிறாயா என்று கேட்டுள்ளார். நான் இப்போது ஏ.வி.எம்.தயாரிப்பில் நடித்து வருகிறேன். அவர்கள் அனுமதி கொடுப்பார்களா என்று தெரியவில்லை என்று சிவக்குமார் சொல்ல, அங்கு படப்பிடிப்பு இல்லாத நாளில் வந்து இங்கு நடி என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
இதை ஏற்றுக்கொண்ட சிவக்குமார் உடனடியாக ஏ.வி.எம்.நிறுவனத்திடம் சென்று, எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. நான் அங்கு போகட்டுமா என்று கேட்க, இங்கு நீங்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறீர்கள். இதை விட்டுவிட்டு அங்கு செல்கிறேன் என்றால் என்ன இது என்று கேட்டு அனுமதி மறுத்துள்ளனர். இதை வந்து எம்.ஜி.ஆரிடம் சிவக்குமார் சொல்ல, பிழைக்க தெரியாத ஆளாக இருக்கிறாயே, இப்படி பல படங்களில் நடித்தால் தான் உனக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ஒரு படத்தை நம்பி பிரயோஜனம் இல்லை என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார்.
அதன்பிறகு எம்.ஜி.ஆர் தனது படத்திற்கு வேறொரு நடிகரை தேர்வு செய்து படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த நிலையில், சிவாஜியுடன் சிவக்குமார் நடித்து வந்த உயர்ந்த மனிதன் படத்தின் படப்பிடிப்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தடை பட்டது. இந்த தடை சில மாதங்கள் நீடித்ததால் அந்த நாட்களில் சிவக்குமார் எந்த வேலையும் இல்லாமல் இருந்துள்ளார். அப்போது தான் எம்.ஜி.ஆர் சொன்னது நினைவுக்கு வந்துள்ளது. அதன்பிறகு மீண்டும் எம்.ஜி.ஆரை சந்தித்துள்ளார் சிவக்குமார்.
இந்த சந்திப்பின் மூலம் சிவக்குமாருக்கு மீண்டும் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படம் தன் காவல்காரன். இந்த படத்தில் எம்ஜி.ஆர் தம்பியாக சிவக்குமார் நடித்திருந்தார். இந்த படம் 1967-ம் ஆண்டு வெளியேன நிலையில், வேலை நிறுத்தம் காரணமாக சிவாஜியுடன் சிவக்குமார் நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படம் 1968-ம் ஆண்டு வெளியானது. இந்த தகவலை பத்திரிக்கையாளர் சபீதா ஜோசப் ஓஎச் சினிமா யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“