அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர்... லேட்டாக வந்த சரோஜா தேவி : பதட்டத்துடன் நடித்த பாடல் காட்சி
1961-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் திருடாதே. சரோஜா தேவி, நம்பியார், கே.ஏ.தங்கவேலு, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்,
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பி.சரோஜா தேவி. தங்கமலை ரகசியம், திருமணம், மனமுள்ள மருதாரம் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படம் தான் இவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர் படத்தின் படப்பிடிப்புக்கே சரோஜா தேவி தாமதாமாக வந்துள்ளார்.
Advertisment
1961-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான படம் திருடாதே. சரோஜா தேவி, நம்பியார், கே.ஏ.தங்கவேலு, எம்.என்.ராஜம் ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார், பி.நீலகண்டன் இயக்கிய இந்த படத்திற்கு சின்ன அண்ணாமலை கதை எழுதிய நிலையில், கண்ணதாசன் திரைக்கதை எழுதியிருந்தார். இந்த படத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர், பல படங்களில் பிஸியாக நடித்து வந்ததால், திருடாதே படத்தின் படப்பிடிப்பு மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை நடைபெறும் வகையில் திட்டமிட்ப்பட்டுள்ளது.
இந்த படத்திற்காக முன்னணி நடிகைகள் கால்ஷீட் கிடைக்க தாமதமாகும் என்பதால், அப்போது வளர்ந்து வரும் நடிகையாக இருந்த சரோஜா தேவி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒருநாள் எதேர்ச்சையாக சரோஜா தேவியின் காலில் கண்ணாடி பட்டில் குத்தி ரத்தம் வந்துள்ளது. இதனை பார்த்த எம்.ஜி.ஆர் அவரது காலை தனது மடியில் வைத்து சிகிச்சை கொடுத்துள்ளார்.
புதுமுக நடிகை தானே என்று இல்லாமல், அண்ணன் நான் இருக்கேன் கவலைப்படாதே மா என்று சொல்லி, எம்.ஜி.ஆர் செய்த அந்த செயல், சரோஜா தேவி அம்மாவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே ஒரு கட்டத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்படும் சூழல் உருவானதால், தயாரிப்பாளராக இருந்த சின்ன அண்ணாமலைக்கு படத்தின் செலவுடன் சேர்த்த லாபமாக குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்கப்பட்டு, கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் படத்தை தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
6 மாதங்கள் கழித்து படப்பிடிப்பு தொடங்கியபோது, சரோஜா தேவி பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நாயகியாக வலம் வந்த நிலையில், அப்போது விடிவெள்ளி படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு காலையில் நடைபெறும் நிலையில், மாலையில் விடிவெள்ளி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதில் ஒருநாள், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தயாராக இருந்தபோதும், சரோஜா தேவி படப்பிடிப்புக்கு வரவில்லை. இதனால் எம்.ஜி.ஆர் கோபத்தில் இருந்துள்ளார்.
அதே சமயம் விடிவெள்ளி படத்தின் படப்பிடிப்பில், ரீ-டேக் வாங்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் படப்பிடிப்பு முடிக்கப்படவில்லை என்பதால் தாமதமாக வந்த சரோஜா தேவி, எம்.ஜி.ஆர் கோபமாக இருப்பதை பார்த்து மன்னித்துவிடுங்கள் அண்ணா என்று சொல்ல, என்னமோ என் நேரம், நீ இப்படி தாமதமாக வருகிறாய் என்று பேசியுள்ளார். இதனால் பதட்டமாக சரோஜா தேவி அந்த பதட்டத்துடனே ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். அந்த பாடல் தான் ‘’என் அருகே நீ இருந்தால்’’ என்ற பாடல்.
இந்த படத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தாலும், இந்த பாடலுக்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“