இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். இசையமைப்பாளர்களிடம் உதவியாகராக இருந்து எம்.ஜி.ஆர் நடித்த ஜெனோவா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தனது குருநாதர் சுப்பையா நாயுடு இறந்த பிறகு அவர் ஒப்புக்கொண்ட படங்களுக்கு தனது நண்பரான ராமமூர்த்தியுடன் இணைந்து இசையமைத்திருந்தார்.
எம்.எஸ்.வி – ராமமூர்த்தி கூட்டணியில் உருவான பல பாடங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தனர். ஒரு கட்டத்தில் எமத்.எஸ்.வி – ராமமூர்த்தி இருவரும் பிரிந்த நிலையில், விஸ்வநாதன் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார். பிரிவுக்கு பின் பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் ராமமூர்த்தி அவ்வளவு பிரபலமாகவில்லை.
எம்.ஜி.ஆர் – சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு தனது பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த எம்.எஸ்.வி, கவிஞர் வாலிக்கு பல படங்களில் வாய்ப்பு கொடுத்து அவரின் முன்னேற்றத்திற்கு உருதுணையாக இருந்துள்ளார். அதேபோல் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய முதல் பாடலுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி தான். குறிப்பாக கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் எம்.எஸ்.வியின் இசையில் உருவானது தான்.
சினிமாவை தாண்டி எம்.எஸ்.வி – கண்ணதாசன் இடையே நல்ல நட்பு இருந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் வந்த பல பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் வகையில் உள்ளதே அதன் தனி சிறப்பு தான். இப்படி பல பெருமைகளை வைத்திருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன், 7 குழந்தைகள் பிறந்த பிறகும் ஒரு பாடலை தவறாக பாடியதால் தனது தாயிடம் கன்னத்தில் அறை வாங்கியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் எம்.எஸ்.வி கூறியுள்ளார்.
நான் சின்ன வயசுல பள்ளிக்கூடத்திற்கு போகவே மாட்டேன். இசைப்பள்ளிக்கு வெளியில் நின்று அதை கேட்டு கேட்டு இசையை கற்றுக்கொண்டேன். நான் பள்ளிக்கு போகவில்லை என்று தெரிந்துகொண்டு என் அம்மா என்னை அடிப்பார். இந்த அடி நான் 7 குழந்தைகளுக்கு அப்பாவான பிறகும் நடந்தது. நான் ஒருமுறை ஒரு மலையாள பாடலை தப்புதப்பாக பாடியபோது, அதில் வார்த்தை சுத்தம் இல்லை என்று என் அம்மா என்னை கன்னத்தில் அடித்துவிட்டார் அப்போது நான் 7 குழந்தைகளுக்கு அப்பா என்று கூறியுள்ளார்.
மேலும் நீ தினமும் தூங்க செல்லும் முன் உனக்கு நல்லது செய்வதவர்களை நினைத்துக்கொண்டு தூங்கு. நல்லது செய்தவர்களை நினைக்காமல் தூங்கினால் தூக்கிக்கொண்டிருக்கும்போதே உயிர் போனால், அவர்களை நினைத்து பார்க்க முடியாத நிலை ஏற்படும். கெட்டது செய்தவர்களை நினைக்காதே என்று என்னை சொல்லி வளர்த்தார் என்று எம்.எஸ்.வி உருக்கமாக பேசியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“