க்ளாசிக் தமிழ் சினிமாவில் நெருக்கமான நண்பர்கள் சகோதரர்கள் என்று அறியப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – கவிஞர் கண்ணதாசன் இடையேயான நெருக்கத்திற்கு பல உதாரணங்களை சொன்னாலும் கண்ணதாசனின் நீண்ட நாள் ஆசை ஒன்றை கடைசிவரை எம்.எஸ்.வி நிறைவேற்றவே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
க்ளாசிக் சினிமாவில் மெல்லிசை மன்னர் என்று பெயரெடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தனது இசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இவர், கண்ணதாசனுடன் இணைந்து ஏராளமான வெற்றிகளை கொடுத்துள்ளார். அதேபோல் எம்.எஸ்.வி இசை என்றால் அதில் கண்ணதாசன் பாடல் இல்லாமல் இருக்காது என்ற நிலையும் இருந்த அந்த காலக்கட்டத்தில் கண்ணதாசன் தினமும் எம்.எஸ்.வியை சந்தித்துவிடுவார்.
அப்படி ஒருநாள் எம்.எஸ்.வி வீட்டுக்கு இரவு 11 மணிக்கு போன் செய்த கண்ணதாசன் மெல்லிசை மன்னர் இருக்காரா என்று கேட்டுள்ளார். யாரோ கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்த எம்.எஸ்.வி ராங் நம்பர் என்று சொல்லி வைக்க போயுள்ளார். ஆனால் டேய் விசு நான் தான் என்று கண்ணதாசன் பேச, இன்னைக்கு உங்களுக்கு நான் தான் கிடைத்தேனா போன் செய்து மெல்லிசை மன்னர் என்று சொல்லி கிண்டல் பண்றீங்க என்று கேட்டுள்ளார்.
இதை கேட்ட கண்ணதாசன் உண்மையை தான் சொன்னேன். நாளை நடைபெறும் விழாவில் உனக்கும் டி.கே.ராமமூர்த்திக்கும் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தை கொடுக்க போகிறோம் என்று கண்ணதாசன் கூறியுள்ளார். 1963-ம் ஆண்டு நடைபெற்ற இந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமுமூர்த்தி இருவருக்கும் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தை வழங்கியுள்ளார். இந்த பெயரை தேர்வு செய்தவர் கண்ணதாசன்.
அந்த அளவிற்கு எம்.எஸ்.வி – கண்ணதாசன் இடையே நெருக்கம் இருந்தாலும், கண்ணதாசனின் பல நாள் ஆசையை எம்.எஸ்.வி கடைசிவரை நிறைவேற்றவே இல்லை. தனது வாழ்கையின் அனுபவங்களை வைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கண்ணதாசன், திரைப்படத்தில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஒவ்வொரு பாடல் எழுதும்போதும் விசு இந்த பாடலை நானே பாடுகிறேன் என்று சொல்ல எம்.எஸ்.வி அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை.
ஆனாலும் எப்போ கம்போசிங் நடந்தாலும், தனக்கு பாட வாய்ப்பு வேண்டும் என்று கண்ணதாசன் கேட்டுக்கொண்டே இருந்துள்ளார். அப்படி ஒருநாள், பாவமன்னிப்பு படத்திற்காக வந்த நாள் முதல் இந்த நாள் வரை என்ற பாடலை எழுதிய கண்ணதாசன் இந்த பாடலை நான் தான் பாடுவேன் கொஞ்சம் சுலபமா டியூன் போடு விசு என்று கண்ணதாசன் கூறியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி, கவிஞரே இப்போது மக்கள் மத்தியில் உங்களுக்கு நல்ல பெயர் உள்ளது. நீங்கள் பாடல் பாடி அதை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட கண்ணதாசன், கடுமையாக கோபப்பட்டாலும் எம்.எஸ்.வி அதை கண்டுகொள்ளவே இல்லை. அதன்பிறகு அந்த பாடலை டி.எம்சௌந்திரராஜன் பாடியிருந்தார். இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டாலும் இறுதிவரை தங்களது நட்பில் எந்த விரிசலும் ஏற்படமால் பார்த்துக்கொண்டனர். தான் எப்போது வெளிநாடு பயணம் சென்றாலும் அந்த பயணத்தில் எம்.எஸ்.வி இருக்க வேண்டும் என்று நினைப்பவர் கண்ணதாசன். அவர் இல்லை என்றால் பயணத்தையே ரத்து செய்யும் முடிவை கூட எடுப்பவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.