மனித உணர்ச்சிகள் அத்தனைக்கும் தனது பாடல்கள் மூலம் உயிர் கொடுத்த கவியரசர் கண்ணதாசன், தமிழில் எழுதிய ஒரு பாடலை அடிப்படையாக வைத்து இந்தியில் ஒரு கவிஞர் எழுதிய பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், அந்த கவிஞர் இந்த புகழ் அத்தனைக்கும் காரணம் கண்ணதாசன் தான் காரணம் என்று மேடையிலேயே கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், தனது பாடல்கள் மற்றும் இசையின் மூலம் மெல்லிசை மன்னர் என்று பெயரேடுத்த எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதேபோல் கவியரசர் கண்ணதாசனுடன் இணைந்து இன்றுவரை போற்றப்படும் பல அரிய பாடல்களை கொடுத்துள்ள எம்.எஸ்.வி, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாரளாக இன்றுவரை போற்றப்படுகிறார்.
இவரது பாடல் மற்றும் இசையமைக்கும் பாணி உள்ளிட்ட பணிகளை பார்த்து பலரும் இவரிடம் பாடல் பாட வேண்டும் என்று விரும்பியுள்ளனர். அதேபோல் கண்ணதாசன் – எம்.எஸ்.வி இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இன்றும், காலம் கடந்து நிலைத்திருக்கிறது. அந்த வகையில் வந்த ஒரு பாடல் தான் குழந்தையும் தெய்வமும் படத்தில் இடம்பெற்ற ‘’கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே’ என்ற பாடல்.
கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கடந்த 1965-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜெய்சங்கர் நாயகனாக நடித்திருந்தார். ஏ.வி.எம்.நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில், எம்.எஸ்.வி இசையமைக்க, கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். தமிழில் இந்த பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரி பாடியிருந்தார். இந்த படம், டூ கலியான என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கிருஷ்ணன் பஞ்சு இருவருமே இந்தியிலும் இந்த படத்தை இயக்கியிருந்தனர்.
இந்தியில், ரவி இசையமைக்க, அனைத்து பாடல்களையும், சாஹிர் லூதியான்வி எழுதியிருந்தார். இதில் கோழி ஒரு கூட்டிலே என்ற தமிழ் பாடலை இந்தியில் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். ஆனால் தமிழில் வந்த அர்த்தம் மாறாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர். அதன்படி அந்த இந்தி கவிஞர் அந்த பாடலை எழுதி இந்தியில் விருதினை பெற்றுள்ளார். விருது பெற்ற மேடையில் பேசிய அந்த கவிஞர், இந்த பாடல் இவ்வளவு வெற்றி பெற்றதற்கு நான் காரணம் அல்ல. கண்ணதாசன் தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்த தகவலை எம்.எஸ்.வி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“