க்ளாசிக் சினிமாவில் எம.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த டி.எம்.சௌந்திரராஜன் தான் பாடிய ஒரு பாடலை பாடி முடித்தபின் ஏன் இந்த பாடலை பாடினோம் என்று வருத்தப்பட்டதும், அதன்பிறகு வேறு எந்த மேடையிலும் அந்த பாடலை பாடவில்லை என்பதும பலரும் அறியாத தகவல்.
தமிழ் சினிமாவில் தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள டி.எம்.சௌந்திரராஜன், ஒருமுறை அவரின் மூத்த மகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது, அவரின் அருகிலேயே இருந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் டி.எம்.எஸ். அப்போது பாகபிரிவினை என்ற படத்திற்காக அவரை பாடல் பாட அழைக்கிறார்கள். ஏற்கனவே ஒப்புக்கொண்ட பாடல் என்பதால் துக்கத்திலும் டி.எம்.எஸ் பாட செல்கிறார்.
1959-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பாகபிரிவினை. சவாஜி கணேசன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, நம்பியார், பாலையா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் 4 பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்த நிலையில், பட்டுக்கோட்டை, மற்றும் மருதகாசி ஆகியோரும் பாடல்களை எழுதியிருந்தனர். அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது.
குறிப்பாக இதில் ஏன் பிறந்தாய் மகனே என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் 4 பாடல்களை பாடிய டி.எம்.எஸ் இந்த பாடலையும் அவரே பாடியிருந்தார். மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஏன் பிறந்தாய் மகனே என்று அவருக்கு கொடுத்த பாடலால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனாலும் இசையமைப்பாளர்களிடம் மெட்டை கேட்ட டி.எம்.எஸ் அவர்களிடம் பாடலை ஒருமுறை பாடி கராட்டியுள்ளார்.
வழக்கமாக 2 முறை ஒத்திகை பார்த்துவிட்டு தான் ரெக்கார்டிங் போகும் டிஎம்எஸ் இந்த முறை ஒரு முறை மட்டும் பாடலை பாடி காட்டிவிட்டு, உடனடியாக ரெக்கார்டிங் சென்று ஒரு டேக்கில் பாடலை பாடி முடித்துள்ளார். பாடி முடித்துவிட்டு அவசர அவசரமாக மருத்துவமனை சென்று பார்த்த டி.எம்.எஸ்-க்கு அவரது மகன் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வருகிறது. இதை கேட்டு மிகவும் வேதனையடைந்த டி.எம்.எஸ், அதன்பிறகு ஏன் பிறந்தாய் மகனே என்ற பாடலை எந்த மேடையிலும் பாடவே இல்லை.
அதேபோல் இந்த பாடல் ரேடியோவில் ஓடினாலும் அதை ஆஃப் செய்துவிடுவராம். ஒரு வருடம் கழித்து படுக்கையில் இருந்த தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற கவிஞர் வாலி, டி.எம்.எஸை அழைத்துக்கொண்டு தனது அம்மாவை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் வற்புறுத்தி கேட்க, மனதை கல்லாக்கிக்கொண்டு ஏன் பிறந்தாய் மகனே என்ற பாடலை மீண்டும் ஒருமுறை பாடியுள்ளார். அத்துடன் வேறு எங்கும் டி.எம்.எஸ் பாடவேயில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.