தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்.
இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்த வாலி, ஒருமுறை தனது நண்பர் நடித்த தாமரைக்குளம் படத்தின் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வாலியின் நண்பன் கோபி அந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.
வாலி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, அவருக்கு ஒரு நடிகைரை கோபி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவருக்கு இதுதான் 2-வது படம் பேர் குண்டுராவ் என்று கூறியுள்ளார். அவரை பார்த்த வாலி, இந்த உடலை வைத்துக்கொண்டு உங்களுக்கு நடிப்பு ஆசை வந்ததே தப்பு என்று கூறியுள்ளார். இதை கேட்ட குண்டுராவ், நீங்கள் கூட தான் சினிமாவில் பாடல் எழுத வந்திருக்கிறீங்க, எந்த நம்பிக்கையில் வந்தீங்க, நீங்கள் என்ன பெரிய புலவரா என்று கேட்டுள்ளார்.
இப்படி தொடக்கத்தில் மோதலாக தொடங்கிய இவர்களின் சந்திப்பு நாளடைவில் பிரிக்க முடியாத நட்பாக மாறியது. அந்த புதுமுக நடிகர் குண்டுராவ் தான் காமெடி நடிகர் நாகேஷ். அதன்பிறகு இருவரும் ஒரே அறையில் தங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ளனர். மேலும் அறையில் வாய்ப்பு இல்லாமல் இருந்தபோது நாகேஷின் வற்புறுத்தலால் பல பாடல்களை எழுதியுள்ளார் வாலி.
அப்படி வாலி எழுதிய பாடல் தான் ‘’காசேதான் கடவுளப்பா’’ என்ற பாடல். இந்த பாடல் எழுதிய போது வாலிக்கு சரியாக வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும், அடுத்த சில ஆண்டுகளில் அவருக்கு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும் இந்த பாடலை பயன்படுத்தும் அளவுக்கு அவர் பாடல் எழுதிய படங்களில் சூழல் அமையவில்லை. இதனால் இந்த பாடல் பெட்டிக்குள் முடங்கி கிடந்த நிலையில், 1968-ம் ஆண்டு ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் வெளியான சக்கரம் என்ற படத்தில் இடம் பெற்றது.
இந்த படத்தில் சூழலை விளக்கி அதற்கான பாடலை எழுதுமாறு வாலியிடம் கேட்டபோது, இந்த பாடல் நினைவுக்கு வந்து, அதை எடுத்து கொடுத்துள்ளார். இந்த பாடலை பார்த்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு ரொம்பவே பிடித்ததால் படத்தில் பயன்படுத்தியுள்ளனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் வெளியான இந்த பாடல் இன்றும் ஒரு சிறப்பான பாடலாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.