தனது படத்திற்கு கால்ஷீட் கொடுக்க மறுத்த நடிகர் திலகம் சாவித்ரியை கவியரசர் கண்ணதாசன் போனில் திட்டியதால், கோபமான சாவித்ரி, கண்ணதாசன் தன்னிட்டம் மன்னிப்பு கேட்டால் கால்ஷீட் கொடுப்பேன் என்று பிடிவாதமாக இருந்துள்ளார். அதன்பிறகு இந்த பிரச்சனையை சிவாஜி கணேசனின் தம்பி தீர்த்து வைத்துள்ளார்.
1962-ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே போர் நடைபெற்றது. இந்த போரில் இந்தியாவுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்திய அரசு மீதும், இந்திய ராணுவம் மீதும் மக்களுக்கு கடும் அதிருப்தி இருந்தது. அந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு தேசப்பற்றை ஊட்டும் வகையில் ஒரு படத்தை எடுத்து வெளியிட வேண்டும் என்று விரும்பிய கவிஞர் கண்ணதாசன் ரத்த திலகம் என்ற படத்திற்கு கதை திரைக்கதை எழுதியுள்ளார்.
பஞ்சு அருணாச்சலம் தயாரித்த இந்த படத்தில், சிவாஜி கணேசன் சாவித்ரி இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சாவித்ரிக்கு எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் மொத்த டெட்டையும் எம்.ஜி.ஆர் படத்திற்கு சாவித்ரி கொடுத்துவிட்டார். இதனிடையே ரத்த திலகம் படம் குறித்து சாவித்ரியிடம் கண்ணதாசனின் உதவியாளர் வீரய்யா போய் பேசியுள்ளார்.
மொத்த டேட்டையும் எம்.ஜி.ஆர் படத்திற்கு கொடுத்துவிட்டதால், அந்த படம் முடிந்தால் தான் ரத்த திலகம் படத்திற்கு டேட் கொடுக்க முடியும் என்று சொல்லிவிடுகிறார். இதை கண்ணதாசனிடம் சொல்ல, கண்ணதாசன் உடனடியாக சாவித்ரிக்கு போன் செய்ய சொல்லியுள்ளார். இதன்பிறகு வீரய்யா சாவித்ரி வீட்டுக்கு கால் பண்ண, போனை எடுத்த சாவித்ரியின் உதவியாளர் அவர் கூட்டி வருகிறேன் என்று சொல்லி லைனில் இருக்குமாறு கூறியுள்ளார்.
அதன்பிறகு சாவித்ரி வந்து போனை எடுத்தது தெரியாமல் கண்ணதாசன் அவர் டேட் கொடுக்கலனா என்ன செய்யிறேன் பாரு... ஃபிலிம கொளுத்திடுவேன் என்று கண்டபடி திட்டியுள்ளார். இதை கேட்ட, சாவித்ரி ஒன்றும் பேசாமல் போனை வைத்துவிட கண்ணதாசன் வீரய்யாவிடம் சொல்லி திரும்பவும் போன் செய்ய சொல்லி இருக்கிறார். இந்த முறை வீரய்யா போன் செய்யும்போது சாவித்ரியே போனை எடுத்துள்ளார்.
கவிஞர் பேசியதை நான் கேட்டேன். அவர் ஃபிலிம் ரோல் கொளுத்த வேண்டும் என்றால் செய்யட்டும். அவர் பேசியது சரியில்லை. அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் அடுத்து டேட் தருவேன் என்று கூறியுள்ளார்.இதனால் பிரச்சனை பெரிதானதை தொடர்ந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணதாசன் யோசிக்க, இந்த பிரச்சனை சிவாஜியின் தம்பி சண்முகத்திடம் செல்கிறது. நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் நான் முடித்து தருகிறேன் என்று சண்முகம் கவிஞரிடம் கூறியுள்ளார்.
அதன்பிறகு சாவித்ரி ஷூட்டிங் செல்லும் ஸ்டூடியோக்களுக்கு சென்று அவரை சந்திக்காமல் அவர் கண்ணில் படுவது போன்று அங்கும் இங்குமாக அலைந்துள்ளார் வீரய்யா. ஒரு வாரம் இதை கவனித்த சாவித்ரி, எதற்காக இப்படி அலையுறீங்க, நான் தான் முடியாது என்று சொல்லிவிட்டேனே இனிமேல் இப்படி பண்ணாதீங்க என்று சொல்லி அனுப்பியுள்ளார். ஆனாலும் வீரய்யா அடுத்த வாரம் அதையே செய்துள்ளார்.
இப்போது மனமிறங்கி வந்த சாவித்ரி இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, இந்த படம் போர் முடிவதற்குள் வெளியாக வேண்டும் அப்போது தான் சரியாக இருக்கும் மக்களுக்கு நாட்டுப்பற்றை ஊட்டியது போன்று இருக்கும். தாமதமாக வெளியானால் சரியாக இருக்காது. படத்தை முடக்கிவிட்டாலும் கவிஞர் கடனாளியாகிவிடுவார் என்று எடுத்து சொல்ல சாவித்ரி டேட் கொடுக்க சம்மதிக்கிறார். அதற்கு 2 நிபந்தனைகளை கூறுகிறார்.
இந்த படத்திற்கான முழு சம்பளமும் ஒரு பெமெண்டடில் வர வேண்டும். அதன்பிறகு படம் தொடர்பான நீங்கள் மட்டும் தான் என்னை தொடர்புகொள்ள வேண்டும். மற்ற யாரும் என்னிடம் பேசக்கூடாது என்று சொல்ல, சரி என்று சொல்லிவிட்ட வீரய்யா கண்ணதாசனிடம் வந்து சொல்கிறார். அதன்பிறகு சாவித்ரி சம்பளத்திற்காக அவருக்கு செக் கொடுக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
அடுத்த 10 நாட்களுக்கு பிறகு வீரய்யாவுக்கு போன் செய்த சாவித்ரியின் உதவியாளர், கண்ணதாசன் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது என்று சொல்ல, நீ சாவித்ரியிடம் இதை பற்றி எதுவும் சொல்லாதே 2 நாட்களில் நான் பணத்தோடு வருகிறேன் என்று சொல்ல, 2 நாட்கள் கழித்து சாவித்ரி சம்பளத்தை பணமாக கொடுத்து அந்த செக்கை திரும்ப பெற்றுள்ளனர். இப்படி பல தடைகளை கடந்து வெளியான ரத்த திலகம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுக்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“