திரையுலகில் பல படங்களில் இணைந்து நடித்துள்ள சிவாஜி பத்மினி ஜோடி வாழ்க்கையிலும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டு இருந்தது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஒரு காட்சிக்காக சிவாஜியை கன்னத்தில் பத்மினி அறைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பால் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் தான் சிவாஜி கணேசன். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களின் நடிப்பை பார்த்து வியந்து பாராட்டுவதும், அவர்கள் சரியாக நடிக்கவில்லை என்றால் நடிப்பு சொல்லிக்கொடுப்பதும், இயக்குனர்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் சிறப்பான நடிப்பை வழங்குவதும் சிவாஜியின் குணாதிசயங்கள்.
முன்னணி நடிகைகள் பலருடன் இணைந்து நடித்துள்ள சிவாஜி, நாட்டிய பேரொலி என்று அழைக்கப்படும் பத்மினியுடன் இணைந்து 60-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பணம். இந்த படம் சிவாஜி நடித்த 2-வது படம் என்றாலும் பத்மினி அதற்கு முன்பே பல படங்களில் நடித்துள்ளார். பணம் படத்தின் ஷூட்டிங்கின்போது, உங்கள் பல படங்களை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் நடிப்பு அருமை என்று சிவாஜி பத்மினியை பாராட்டியுள்ளார்.
அதோபோல் தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் இல்லை. அந்த குறையை போக்கதான் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று பத்மினி சிவாஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படம் தான் எதிர்பாராதது. 1954-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சிவாஜி, பத்மினி, அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் பத்மினி சிவாஜி இருவரும் காதலித்து வரும் நிலையில் வெளிநாட்டிற்கு படிக்க போகும் சிவாஜி, எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. இதனிடையே சிவாஜியின் அப்பாவை பத்மினி திருமணம் செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டு, திருமணமும் முடிந்துவிடுகிறது. விமான விபத்தில் சிக்கிய சிவாஜி கண்பார்வையை இழந்து பத்மினியின் வீட்டில் தஞ்சமடைகிறார்.
தனது அப்பாவின் மனைவி என்று தெரியாத சிவாஜி பத்மினிக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதால் அவளுடைய நண்பனாக அந்த வீட்டில் இருக்கிறார். அப்போது ஒருநாள் பத்மினி கையை பிடித்து சிவாஜி பழைய நினைப்பில் நடந்துகொள்ள பத்மினி அவரை ஓங்கி அடித்துவிடுவார். இந்த காட்சி படமாக்கப்படும்போது சிவாஜியை அடிக்க பத்மினி தயங்கியுள்ளார். ஆனாலும் பரவாயில்லை நடிப்புதானே தைரியமாக பண்ணுங்க என்று சிவாஜி கூறியுள்ளார்.
அதை ஏற்றுக்கொண்ட பத்மினி படப்பிடிப்பு தொடங்கியவுடன் சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். ஒரு அறையோடு விட்டுவிடாமல் மாறி மாறி அறைந்துள்ளார். காட்சி சிறப்பாக வருவதை பார்த்த இயக்குனரும் கட் சொல்ல மறந்துவிட்டதால், பத்மினியும் அதிரடியாக சிவாஜியை பார்த்து அறைந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிவாஜியின் முகத்தில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையிலும், பத்மினி அடியை நிறுத்தவில்லை.
அதே சமயம் வலி தாங்கிக்கொள்ள முடியாத சிவாஜி கட் கட் என்று கத்திய நிலையில், படப்பிடிப்பு குழுவினர் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். ஆனாலும் பத்மினி அதை யோசிக்காமல் அடித்தபடியே இருந்துள்ளார். இதனால் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பத்மினிக்கு ஊசி போட்டு கைகால் அமுக்கிவிட்டுள்ளனர். என்னை மாறி மாறி அடித்த பத்மினியை அனைவரும் கவனித்துக்கொண்டார்கள். ஆனால் பத்மினி கையால் முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று சிவாஜி ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.