திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடலுக்கு முன்னோடியாக அமைந்தது தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் பி.யூ.சின்னப்பா என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
1965-ம் ஆண்டு ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் திருவிளையாடல். சிவாஜி கணேசன், சாவித்ரி, முத்துராமன், பாலையா நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு கே.பி.மகாதேவன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்றும் அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு பாடலாக நிலைத்து நிற்கிறது.
அந்த வகையில் பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலில், சிவாஜி கணேசனின் நடிப்பு பலரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது. சிவனாக நடித்த சிவாஜி கணேசன், மனிதனாக வந்து தான் ஒரு பெரிய ஆள் என்பதை நிரூபிக்க வேண்டும். அந்த நேரத்தில் வரும் பாடல் தான் பாட்டும் நானே பாவமும் நானே. இந்த பாடல் காட்சிக்காக மட்டும் சிவாஜி கணேசன் 5 வேடங்களில் நடித்திருப்பார்.
முதலில் பாட்டும் நானே என்று குருவாக வந்து அமரும் சிவாஜி பாடலை பாட தொடங்கியவுடன், அடுத்து வீனை வாசிப்பவராக மற்றொரு சிவாஜி வந்து அமர்வார். அதன்பிறகு நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே என்று பாடி முடிக்கும்போது, ஒரு பிரேமில் 5 சிவாஜி வந்து அமர்ந்திருப்பார்கள். ஒருவர் புல்லாங்குழல், ஒருவர் கொண்ணக்கோல், கடைசியில் ஒருவர் மிருதங்கம் வாசிப்பவராக வந்திருப்பார்.
இந்த பாடலில் 5 கேரக்டர்ளும் ஒவ்வொரு மாதிரியான நடிப்பை கொடுத்திருப்பார்கள். இந்த 5 கேரக்டர்களுக்கான காட்சிகள் தனித்தனியாக எடுக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கேரக்டருக்குமான வித்தியாசம் சரியாக தெரியும் வகையில் அமைத்திருப்பார்கள். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடலில் சிவாஜியின் நடிப்புக்கு உந்து சக்தியாக இருந்தவர் பி.யூ.சின்னப்பா.
1944-ம் ஆண்டு எஸ்.எம்.ஸ்ரீராமலு நாயுடு இயக்கத்தில் வெளியான படம் ஜெகதளபிரதாபன். பி.யூ சின்னப்பா எம்.எஸ்.சரோஜனி இணைந்து நடித்திருந்த இந்த படத்திற்கு, ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வரும் தாயை பணிவேன் என்ற பாடல் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. பாபநாசம் சிவன் என்பவர் எழுதிய இந்த பாடலில் பி.யூ.சின்னப்பா 5 கேரக்டர்களில் நடித்திருப்பார்.
சினிமாவில் அதிகமாக டென்னாலஜி பயன்படுத்தாத காலக்கட்டத்தில், ஒரு .ஃபிரேமில் 5 கேரக்டர்களில் நடித்துள்ள பி.யூ.சின்னப்பா ஒவ்வொரு கேரக்டருக்கும் வித்தியாசம் காட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த பாடலை முன்னோட்டமாக வைத்து தான் திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற பாட்டும் நானே பாவமும் நானே பாடலில் காட்சிகள் வடிவமைத்துள்ளனர் என்று கூறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“