சிவாஜி கணேசன் வேண்டாம் என்று சொல்லியும் அவரின் பேச்சை கேட்காமல் ஏ.வி.எம் நிறுவனம் ஒரு படத்தை இந்தியில் ரீமேக் செய்து பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவலாக இருக்கிறது.
1960-ம் ஆண்டு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை திரைக்கதையில் கிஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியான படம் தான் தெய்வ பிறவி. சிவாஜி பத்மினி எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் போட்டி போட்டு நடித்த இந்த படத்திற்கு சுதர்சன் இசையமைத்திருந்தார். சிவாஜியின் அறிமுக படமாக பராசக்தி படம் தொடங்கி பச்சை விளக்கு, ஆலயமணி, கை கொடுத்த தெய்வம், தெய்வபிறவி உள்ளிட்ட பல படங்களில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஏ.வி.எம்.நிறுவனம் இந்த படத்தை இந்தியில் எடுக்க யோசித்துள்ளனர். இந்த யோசனையை சிவாஜி கணேசனிடம் சொல்ல, அவரே இந்த படத்தை இந்தியில் எடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ஏ.வி.எம்.சரவணன் இயக்குனர்கள் கிருஷ்ணன் –பஞ்சு ஆகியோர் கடுமையாக கோபப்பட்டுள்ளனர். ஆனாலும் சிவாஜி கணேசன் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதற்கு முழு காரணம் நான், எஸ்.எஸ்.ராஜேந்திரன், பத்மினி ஆகிய மூவருமே போட்டி போட்டு நடித்திருக்போம். ஆனால் இந்தியில் அந்த அளவிற்கு நடிப்புத்திறமையை வெளிப்படுத்த நடிகர்கள் இல்லை என்று கூறியுள்ளார் சிவாஜி. ஆனாலும் அவர் பேச்சை கேட்காத ஏ.வி.எம்.நிறுவனம், படத்தை பிந்தியா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தது. படத்தில் பத்மினியே நாயகியாக நடித்த நிலையில், பால்ராஜ் சஹானி, ஜக்தீப் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தியிலும் கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு தான் சிவாஜி கணேசன் சொன்னது சரிதான் என்பதை ஏ.வி.எம் நிறுவனம் உணர்ந்துள்ளது. இது குறித்து ஏ.வி.எம்.சரவணன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ பதிவு ஒன்றை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“