சிவாஜியுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த நடிகர் தியாகராஜனை அழைத்த சிவாஜி, அவரை சமாதானம் செய்து நடிக்க வைத்துள்ளார். அப்படி வெளியான படம் தான் கருடா சவுக்கியமா? இந்த படத்தின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான அனுபங்கள் குறித்து தியாகராஜன் கூறியுள்ளார்.
Advertisment
1981-ம் ஆண்டு கார்த்திக் ராதா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தியாகராஜன். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இதனால் தியாகராஜனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்துள்ளார்.
வில்லனாக அறிமுகமான இவர், தொடர்ந்து ஒரு சில படங்களில் வில்லனாக நடித்திருந்த நிலையில், பின்னாளில், ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். நடிகர் மட்டுமல்லாமல், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வரும் தியாகராஜன், தனது மகன் பிரஷாந்த் நடிப்பில் ஆணழகன், ஷாக், உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.
1988-ம் ஆண்டு வெளியான பூவுக்குள் பூகம்பம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக தியாகராஜன், அடுத்து, சேலம் விஷ்ணு, பொன்னர் சங்கர் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் தியாகராஜன் இயக்கத்தில், தயாராகியுள்ள அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அவரது மகன் பிரஷாந்த் நாயகனாக நடித்துள்ளார்.
Advertisment
Advertisements
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள தியாகராஜன் சினிமாவுக்கு வந்து 3-வது படமாக கருடா சவுக்கியமா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவாஜி கணேசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கருடா சவுக்கியமாக படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு வந்தபோது இந்த படத்தில் சிவாஜி நடிக்கிறார் என்று தெரிந்த தியாகராஜன் இந்த வாய்ப்பு எனக்கு வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு 2 வாரங்கள் கழித்து சிவாஜியிடம் இருந்து அழைப்பு வர, சத்யரா ஸ்டூடியோவிற்கு வந்துள்ளார் தியாகராஜன். அப்போது எம்.ஜி.ஆரின் மேக்கப் அறையில் இருந்து மேக்கப் போட்டுக்கொண்டு இருந்த சிவாஜி கணேசன், என்ன என்கூட நடிக்க முடியாதுனு சொன்னியாமே என்று கேட்க, நடிக்க முடியாது என்று சொல்லல, உங்களோட நடிக்க எனக்கு பயம் என்று தியாகராஜன் கூறியிருக்கிறார். என்கூட நடிக்க என்ன பயம், நீதான நல்லா நடிக்கிறீயே என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த படத்தில் தியாகராஜன் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும்போது பிஸினஸ் விஷயமாக அடிக்கடி தென்ஆப்பிரிக்கா சென்று வந்திருந்த தியாகராஜன், உடலில் அதிகமாக நடிகைகள் அணிந்திருந்துள்ளார். அப்போது அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து, சிவாஜிக்கு வணக்கம் சொல்லும்போது வாடா நகைக்கடை என்றுதான் சிவாஜி அழைப்பார் என்று தியாகராஜன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“