நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்நாள் கனவு படமாக இருந்த வீராபாண்டிய கட்டபொம்மன் கதையை நாடகமாக நடத்தவும் அதை திரைப்படமாக எடுக்கவும் பல தடைகளை கடந்து வந்துள்ளார் சிவாஜி கணேசன்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முக்கியமானவர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கருணாநிதி வசனத்தில் வெளியான பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சிவாஜி கணேசன், முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியதோடு, பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
பராசக்தி படம் வெளியான சமயத்தில் சிவாஜி கணேசன் வரும் காலங்களில் பெரும் நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று பத்திரிக்கைகளில் எழுதியவர் சம்பத் குமார் என்ற ஆசிரியர். பராசக்தி படம் வெளியானபோது இம்மாத நடச்த்திரம் என்று சிவாஜியை குறிப்பிட்ட சம்பத்குமார், சிவாஜி வரும் காலத்தில் பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று எழுதியிருந்தார். அதன்படி பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்த சிவாஜி கணேசன் பல வரலாற்று படங்களில் நடித்துள்ளார்.
இந்த பட்டியலில் குறிப்பிடத்தக்க ஒரு படம் தான் வீரபாண்டிய கட்டபொம்மன். சிவாஜி கணேசன் சிறுவயதாக இருக்கும்போது, ஏராளமான நாடகங்களை பார்த்துள்ளார். அதில் அவரது மனம் கவர்த்த நாடகம் தான் வீரபாண்டிய கட்டபொம்மமன். இந்த நாடகத்தை பார்த்து நடிப்பின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட அவர், நாடக குழுவில் தன்னை இணைத்துக்கொண்டு நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு பெருமாள் முதலியாரின் உதவியுடன் பராசக்தி படத்தில் நாயகனாக அறிமுகமானார்.
அதன்பிறகு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாறிய சிவாஜி தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார். ஆனால் அவரது விருப்பமும் கனவுமான வீரபாண்டிய கட்டபொம்மன் கேரக்டரை ஏற்று நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஒருமுறை தனது நாடகமன்றத்தின் மூலம் நாடகத்தை நடத்திவிட்டு, கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, தனது நாடக குழு தலைவராக சக்தி கந்தசாமியிடம் கட்டபொம்மன் நாடகத்தை நடத்த வேண்டும் என்று கூறி கதை எழுதுமாறு கூறியுள்ளார். அதன்படி அவர் நாடகத்தை எழுத அதை படித்து பார்த்த சிவாஜி மெய்மறந்து அந்த கட்டபொம்மன் கேரக்டருக்குள் சென்றுள்ளார்.
அதன்பிறகு இந்த நாடகத்தை தயாரிக்க ஏறக்குறைய 20 மாதங்கள் ஆகியுள்ளது. அதன்பிறகு காட்சிக்கான வரைபடம், உடைகள் என அனைத்தும் தயார் செய்யப்பட்டது. அதன்பிறகு ஓரிது நாட்கள் நாடகத்திற்கான ஒத்திகை நடைபெற்றுள்ளது.1957-ம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் முதன் முதலாக சேலம் கண்காட்சி கலையரங்கத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நாடகத்திற்கு மக்கள் ஆதரவு பெருகிய நிலையில், சிவாஜியின் வாழ்நாள் கனவும் நிறைவேறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“