தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் தனது நடிப்பால் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கும் நிலையில், இவர் சரியாக நடிக்கவில்லை என்று கூறி ஒரு இயக்குனர் இவருக்கு நடித்து காட்டியதும், அதன்பிறகு சிவாஜி அந்த செட்டில் இருந்து வெளியேறிய சம்பவமும் நடந்துள்ளது பலரும் அறியாத ஒரு தகவல்.
1967-ம் ஆண்டு இயக்குனர் திலகம் என்று அழைக்கப்படும் கே.எஸ்.கோபலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் பேசும் தெய்வம். சிவாஜி கணேசன், பத்மினி, சவுக்கார் ஜானகி, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஒருநாள் சிவாஜி ஒரு காட்சியில் நடித்தார். இந்த காட்சி முடிந்தவுடன் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஒன்மோர் (திரும்பவும்) என்று கூறியுள்ளார். அதன்பிறகு சிவாஜி மீண்டும் அந்த காட்சியில் நடிக்க, மீண்டும் இயக்குனர் ஒன்மோர் என்று கூறியுள்ளார். இப்படியே 6 முறை திரும்பவும் நடிக்குமாறு இயக்குனர் கூறியுள்ளார். அதன்பிறகும் திருப்தி இல்லாத அவர் மீண்டும் ஒன்மோர் சொல்ல, சிவாஜி இயக்குனர் அருகில் வந்துள்ளார்.
இந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்த அத்தனை மாடலேஷன்களிலும் நடித்துவிட்டேன். இதற்கு மேல் எப்படி நடிக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. தயவு செய்து நீ நடித்து காட்டு அதன்பிறகு அதை பார்த்துவிட்டு அதே மாதிரி நான் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட இயக்குனர் அண்ணே உங்களுக்கு நான் எப்படி நடித்து காட்டுவது, தயவு செய்து நீங்கள் மீண்டும் ஒருமுறை நடித்துவிடுங்கள் என்று செட்டில் இருந்த அனைவரும் எதிர்பார்த்தனர்.
அப்படி எதுவும் நடக்கமால், இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அந்த காட்சியில் நடிக்க தயாராகியுள்ளார். அதன்படி சிவாஜி இந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை நடித்து காட்ட, அவர் நடிப்பை பார்த்துக்கொண்டிருந்த சிவாஜி, அவர் நடித்து முடித்தவுடன், சரி நான் கிளம்புகிறேன் என்று சொல்லி செட்டில் இருந்து வீட்டிற்கு கிளம்பிவிட்டார். இதனால் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், சிவாஜியின் கால்ஷீட் இன்றுடன் முடிகிறது. நாளை அவர் வேறு படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார். இனிமேல் எப்படி கால்ஷீட் வாங்குவது என்று யோசித்துள்ளார்.
நள்ளிரவு நேரத்தில், சிவாஜியிடம் இருந்து கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு போன் வருகிறது. அதில் பேசிய சிவாஜியின் உதவியாளர், நாளை புதிய படத்தின் படப்பிடிப்புக்கு சிவாஜி 11 மணிக்கு வருவதாக கூறியுள்ளார். அதனால் 7 மணிக்கு உங்களை தயாராக இருக்க சொன்னார் என்று கூறியுள்ளார். சொன்னபடி மறுநாள் காலை 7 மணிக்கு மேக்கப்புடன் செட்டுக்கு வந்த சிவாஜி அந்த காட்சியில் அற்புதமாக நடித்து அசத்தியுள்ளார்.
சிவாஜியின் நடிப்பை பார்த்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கண் கலங்கியுள்ளார். வேகமாக ஓடிச்சென்று சிவாஜியை கட்டிப்பிடித்துக்கொண்டு இதை தான் நேற்று நடிக்க சொன்னேன் அண்ணே என்று சொல்ல, நீ நடித்து காட்டியவுடன், நாம் பல படங்களில் நடித்திருக்கிறோம். இவர் நடித்தது போன்று இதுவரை நடித்தது இல்லையே என்று யோசித்துதான் வீட்டிற்கு கிளம்பி போய்விட்டேன். வீட்டில் போய் கண்ணாடி முன்பு நின்று நீ நடித்தது போன்று 20 முறைக்கு மேல் நடித்து பார்த்தேன். என் நடிப்பின் மீது எனக்கே திருப்தி ஏற்பட்ட பிறகுதான் நான் உனக்கு போன் செய்து நாளை ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“